கப்பல் கேப்டன் தலைமையில் சுற்றுலா சென்றபோது விபத்து... மசினகுடியில் நடந்தது என்ன?
Recommended Video
ஊட்டி: ஊட்டி அருகே கல்லட்டி மலைபாதையில் 300 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கப்பல் கேப்டன் உள்பட 5 பேர் பலியாகிவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்தவர் ஜூட் ஆன்டோ கெவின் (34). இவர் கப்பல் கேப்டனாக பணிபுரிந்தார். இவர் தனது நண்பர்களான சென்னை கொளத்தூரை சேர்ந்த ராம ராஜேஷ் (36), வியாசர்பாடி இஸ்மாயில் தெருவை சேர்ந்த இப்ராகிம் (35), பெரம்பூரை சேர்ந்த அருண் (36), வீரபாண்டி தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவி வர்மா (39), செல்வம் நகர் ஜெயக்குமார் (36), அமர்நாத் (35) ஆகியோருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார்.
கடந்த 30-ஆம் தேதி காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அங்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர். இதையடுத்து கடந்த 1-ஆம் தேதி காலை ஹோட்டலில் இருந்து காரை எடுத்துக் கொண்டு மசினகுடியை பார்க்க புறப்பட்டனர்.
சாலையோர பள்ளம்
அவர்கள் கல்லட்டி மலைப்பாதையில் புதுமந்து பகுதியில் 35-ஆவது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.
உறவினர்கள் கவலை
காருக்குள் சிக்கிய 7 பேரும் உயிருக்கு போராடியுள்ளனர். மரங்கள் நிறைந்த பகுதியில் கார் விழுந்ததால் அங்கு நடந்த விபத்து குறித்து மற்ற வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை. இந்நிலையில் சுற்றுலா சென்றவர்கள் நேற்று முன் தினம் வருவதாக கூறிய நிலையில் அவர்களிடம் இருந்து தகவல் கிடைக்காததால் உறவினர்கள் கவலையடைந்தனர்.
தேடி பார்த்தனர்
செல்போன் சிக்னலும் விட்டு விட்டு வந்ததால் சந்தேகமடைந்து அவர்கள் ஊட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் நீலகிரி மாவட்ட எஸ்பி சண்முகப்பிரியா உத்தரவின்பேரில் போலீஸாரும் முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினரும் கல்லட்டி பகுதியில் நேற்று தேடி பார்த்தனர்.
உயிருக்கு போராட்டம்
அப்போது 300 அடி ஆழ பள்ளத்தில் கார் ஒன்று நொறுங்கி கிடப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது ராமராஜேஷ் மற்றும் அருண் ஆகிய இருவர் மட்டும் உயிருக்கு போராடியது தெரியவந்தது.
5 பேர் பலி
இதையடுத்து அவர்கள் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கும் தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஜூட் கெவின், ரவி வர்மா, ஜெயக்குமார், அமர்நாத் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. அவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து எப்படி நடந்தது என்பது உயிருடன் உள்ள இருவரிடம் கேட்டால் மட்டுமே தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.