அரசியல் காழ்ப்புணர்ச்சியால் காஞ்சி ஜெயேந்திரர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது: அமித்ஷா
சென்னை: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியான நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற ஜெயேந்திரரின் 84வது ஜெயந்தி நிறைவு விழா நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘' காஞ்சி மடம், 2,500 ஆண்டுகள் பாரம்பரியமிக்கது. குஜராத்தில் இரு சமூகத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட்ட போது, ஜெயந்திரர் வந்து சமரசம் செய்து வைத்ததார்.
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரின் பாதங்கள், குஜராத்தில் படாத இடமே கிடையாது என்னும் வகையில், மாநிலம் முழுவதும் மக்களுக்கு ஆசி வழங்கியுள்ளார். இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் வழிகாட்டு மையமாக காஞ்சி மடம் இருக்கிறது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, ஜெயேந்திரருக்கு, அரசு மரியாதை அளித்து பெருமைப்படுத்தினோம். 2,500 ஆண்டுகளுக்கு முன் ஆதிசங்கரர் தேசம் முழுவதும் தர்ம பிரசாரம் மேற்கொண்டார். அவற்றை மக்களுக்கு எடுத்துச் செல்லவே, 5 மடங்கள் நிறுவப்பட்டன. அவற்றுள் காஞ்சி மடம் மிக முக்கியமானது. இப்போதும் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.
காஞ்சி மடத்திற்கு அரசியல் நோக்கத்திற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு சட்ட ரீதியான இடர்பாடு ஏற்பட்டது. ஆனால், உண்மையை மறைக்க முடியாது. நாடு முழுவதும் மக்கள் அவருக்காக களம் இறங்கி போராடினர். அப்போது குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த நானும், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டேன் என்று அமித்ஷா கூறினார்.