காவிரி விவகாரம்: நீதிமன்ற .தீர்ப்புபடி அரசு செயல்படும்- நிர்மலா சீதாராமன்
சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நீதிமன்றத் தீர்ப்பின் படி செயல்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
உப்பு, மஞ்சள் உற்பத்தியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. ஆனால் விவசாயிகளின் நிலை கவலை அளிக்கிறது. விவசாயிகளின் நிலையை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழகத்தில் உப்பு, மஞ்சளுடன் தக்காளி, நெல் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடலோரப்பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உப்பு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய பட்ஜெட் தயாரிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து தற்போது எதையும் விரிவாக கூறமுடியாது.
மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. சுமூகநிலைக்கு இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சு நடைபெற்று வருகிறது.
காவிரி உள்ளிட்ட தண்ணீர் பிரச்சனையில் மத்திய அரசு நல்ல நடவடிக்கை எடுக்கும். காவிரி விவகாரத்தில் 'நீதிமன்றத் தீர்ப்பின் படி மத்திய அரசு செயல்படும்'. கர்நாடகம் மற்றும் தமிழகத்திற்கு சாதக, பாதகமின்றி மத்திய அரசு செயல்படும். தெலுங்கானா மற்றும் ஆந்திராவிற்கு சிறப்பு சலுகை வழங்குவது குறித்து ஆராயப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.