காவிரி விவகாரம்... மத்திய அரசைக் கண்டித்து 7-ம் தேதி முக ஸ்டாலின் உண்ணாவிரதம்!
தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் வரும் 7ம் தேதி திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் கட்சியில் பொருளாளர் முக ஸ்டாலின் பங்கேற்கிறார்.
உச்சநீதிமன்ற உத்தரவை புறக்கணித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சையில் வரும் 7ம் தேதி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
முக ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இப்போராட்டத்தில் திமுக தலைமை நிலையம் முதன்மை செயலாளர் துரைமுருகன், மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தின் திமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
அதேபோல மத்திய பாஜக அரசின் அணுகுமுறையை கண்டித்து வரும் 7ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டத்தில் மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார்.
இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் பிரதமரின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.