பிரதமருக்கு எதிர்ப்பு: கருப்பு பேட்ஜ் அணிந்து பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து கொண்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கிடையே பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார்.
அவருக்கு எதிராக சென்னையில் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மோடியே திரும்பி செல் என்ற முழக்கம் ஒலித்தது.
பிளஸ் 2 தேர்வு தமிழகம் மற்றும் புதுவையில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் பல மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.