ராமஜெயம் வழக்கு: சிபிசிஐடிக்கு அக்டோபர் 28 வரை அவகாசம்
மதுரை: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை அக்டோபர் 28ம் தேதிக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
தில்லைநகரில் வசித்து வந்த ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி அதிகாலையில் வாக்கிங் சென்ற போது கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் 3 ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கண்டறியப்படாததால், வழக்கு விசாரணயை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை கடந்த ஜூன் 12ம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, குற்றவாளிகளை கண்டறிய ஜூலை 24ம் தேதி வரை சிபிசிஐடி க்கு காலக்கெடு அளித்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் நீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது.
விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் இன்று தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இவ்வழக்கில், ஏற்கனவே அரசு தரப்பிற்கு பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், தற்போது மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுள்ள உயர்நீதிமன்றக்கிளை மேலும் 3 மாதங்கள் இறுதி அவகாசம் அளித்துள்ளது. அக்டோபர் 28ம் தேதிக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து, வழக்கை முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.