யுவராஜிடம் பேட்டி: 3 டிவி சேனல்கள், வார இதழுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜிடம் பேட்டி எடுத்ததாக, 3 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் வார இதழுக்கு விளக்கம் கேட்டு சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ், கடந்த ஜூன் 23ம் தேதி பள்ளிபாளையம் அருகே வெள்ளிக்குட்டை ரயில் பாதையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் 100 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார். எனினும் வாட்ஸ் அப் மூலமாகவும், சமூக ஊடகம் மூலம் அவ்வப்போது பேசியும், காவல் துறை அதிகாரிகளைக் கடுமையாக எச்சரித்தும் வந்தார். மேலும், சில தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் வார இதழ் ஒன்றுக்கும் பேட்டி அளித்திருந்தார் .
இந்த நிலையில் கடந்த 11ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி காவல் அலுவலகத்தில் சரணடைந்தார். அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இப்போது வேலூர் சிறையில் யுவாராஜ் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீசார், சம்பந்தப்பட்ட 3 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் வார இதழுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications