டி.எஸ்.பி விஷ்ணு பிரியா சொந்த ஊரில் சிபிசிஐடி, தடயவியல் அதிகாரிகள் விசாரணை
கடலூர்: தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி விஷ்ணு பிரியா சொந்த ஊரில் சிபிசிஐடி போலீசாரும் தடய அறிவியல்துறை போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா கடந்த வாரம், அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கடந்த 5 நாட்களாக நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விஷ்ணு பிரியாவின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ள அவரின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தினர். சிபிசிஐடி எஸ்.பி நாகதேவி, டிஎஸ்பி ராஜன் மற்றும் ஆய்வாளர் தீபா ஆகியோர் அடங்கிய மூவர் குழு விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
மறைக்கப்பட்ட பக்கங்கள்
தற்கொலை செய்வதற்கு முன்பு விஷ்ணுபிரியா எழுதியதாக 9 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை காவல்துறையினர் சேலத்தில் வெளியிட்டனர். இதில் சில பக்கங்கள் மறைக்கப்பட்டு விட்டதாக விஷ்ணுபிரியாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடிதம் பரிசோதனை
இந்த நிலையில் முதற்கட்டமாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள கடிதத்தில் உள்ள எழுத்துகள் விஷ்ணுபிரியா எழுதியதுதானா? என சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சேலம் தடயவியல் துறை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோகுல்ராஜ் கொலைவழக்கு
மேலும் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தனிப்படையில் இடம்பெற்று இருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் திருச்செங்கோடு டிஎஸ்பி அலுவலகத்தில் பணியாற்றும் காவல்துறையினரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரித்தபோது, அவர்கள் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது. எனவே அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் மீண்டும் விசாரிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
டைரி ஆய்வு
இதேபோல் விஷ்ணுபிரியாவின் டைரியை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, வெளி மாவட்டத்தில் இருந்து அவருக்கு கடந்த ஜூலை மாதம் தனியார் கூரியர் நிறுவனம் மூலம் பார்சல் ஒன்று வந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருச்செங்கோடு உழவர்சந்தை அருகில் உள்ள அந்த தனியார் கூரியர் நிறுவனத்தில் நேற்று சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.
எங்கிருந்து வந்தது
அப்போது அந்த பார்சல் எங்கிருந்து வந்தது? அதை அனுப்பியது யார்? அதில் என்ன இருந்தது? என்பது போன்ற கேள்விகளை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கேட்டதாகவும், மேலும் அங்குள்ள பழைய கோப்புகளையும், ரசீது புத்தகங்களையும் ஆய்வு செய்து அவர்கள் குறிப்பு எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.