மார்ச் 12 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்... சிபிஎஸ்இ அறிவிப்பு!
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 3 நாட்களுக்கு சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது.
டெல்லி : மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12 வரை மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு முறையில் நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நீதிமன்றத்தை நாடிய போதும் அதற்கு பயனில்லை. குறிப்பாக தமிழக அரசு நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறிய போது எந்த கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை.
சிபிஎஸ்இ என்று சொல்லப்படும் மத்திய அரசின் கல்வி வாரியம் நடத்தும் இந்த நுழைவுத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலேயே அமைவதால் சிபிஎஸ்இ பாடப்பிரிவின் கீழ் பயிலாத மாணவர்களுக்கு சிரமமமாக இருக்கும் என்பதாலேயே கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் நீட் கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த ஆண்டு தமிழக அரசு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தியது.
மே மாதத்தில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாணவர்கள் அளிக்க நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.