நீட் தேர்வில் தமிழ் மொழிக் கேள்விகள் கடினமா?... ஹைகோர்ட் கிளையில் சிபிஎஸ்இ பதில்மனு!
நீட் தேர்வின் போது தமிழ் மொழியில் கேட்கப்பட்ட கேள்விகள் மட்டும் கடினமாக இருந்நது எனக் கூறுவதை ஏற்க முடியாது என்று சிபிஎஸ்இ தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஜெரோபா மற்றும் திருச்சியை சேர்ந்த மாணவி சக்தி மலர்க்கொடி இருவரும் நீட் தேர்வுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர். திருச்சியை சேர்ந்த சக்தி மலர்கொடி என்பவர் கடந்த 24ம் தேதி நீட் தேர்வு முடிவுக்கு தடை கோரி தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆங்கில மொழி வினாத்தாள் தவிர குஜராத்தி, இந்தி, மராத்தியில் மொழியில் வினாத்தாள் எளிமையாக இருந்தததாக புதுக்கோட்டை மாணவி தனது மனுவில் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால் மே மாதம் 7ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தர வரிசை சீராக இருக்காது என்பதால் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
— Manoj Prabakar S (@imanojprabakar) June 6, 2017 |
பதிலளிக்க உத்தரவு
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி அங்கீகரிக்கப்பட்ட மொழிப்பெயர்ப்பாளர் மூலம் குஜராத்தி,இந்தி,மராத்தி வினாத்தாளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். மேலும் நீட் தேர்வு குறித்து எழுந்துள்ள புகார்களுக்கு சிபிஎஸ்இ மற்றும் தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
கேள்விகள் கடினமா?
இதனையடுத்து இன்று சிபிஎஸ்இ சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், நீட் தேர்வு முடிவை வெளியிட விதித்த தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் கேட்கப்பட்ட கேள்வித் தாள் மட்டுமே கடினமாக இருந்ததாக கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளது.
2 வினாத்தாள் தயாரிப்பு
8 பிராந்திய மொழிகளில் 2 செட் வினாத்தாள் தயாரிக்கப்பட்டதாகவும், ஏதேனும் ஒரு வினாத்தாள் கசிந்துவிட்டால் அதனை சமாளிப்பதற்காகவே 2 வினாத்தாள் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் 90 சதவீதம் பேர் எழுதியுள்ளதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரசு எதிர்ப்பு
இதே போன்று நீட் வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் அரசு எப்போதும் நீட் தேர்வை ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளது. மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வுக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது. இரு தரப்பு பதில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு ஜூன் 12ம் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.