ரூ.10 லட்சம் கொள்ளையை காட்டிக்கொடுத்த சிசிடிவி: 6 பேர் கைது
சென்னை: சென்னை அண்ணா நகரில் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை போரூரைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 50). இவர் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில், செல்வம் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை பார்த்தார்.
கடந்த மாதம் 25ம் தேதியன்று இதுபோல் வசூலித்த பணம் ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு, செல்வம் மோட்டார் சைக்கிளில் வந்தார். சென்னை அண்ணாநகர் 11-வது மெயின் ரோடு வழியாக வரும்போது, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பணத்தை கொள்ளை அடித்து சென்று விட்டனர்.
இதுதொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அண்ணாநகர், அமிஞ்சக்கரை பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
பணம் கொள்ளை போன பகுதியில் ஒரு வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பணம் கொள்ளை அடித்த சம்பவம் பதிவாகி இருந்தது. கொள்ளையர்களின் இருவர் உருவமும், அவர்களோடு வந்து தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மேலும் இருவரின் உருவமும் கேமரா காட்சியில் தெளிவாக தெரிந்தது.
இதை வைத்து கொள்ளையர்கள் யார் என்பதை போலீசார் துப்பு துலக்கி விட்டனர்.
செல்வம் வேலை பார்த்த கம்பெனியில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட 2 பேரும் கேமரா படத்தில் பதிவாகி இருந்தனர். செல்வம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்வதை தெரிந்து கொண்டு, அதை கொள்ளை அடிக்க திட்டம் போட்டு செயல்படுத்தி உள்ளனர். விஜய் என்ற விஜயகாந்த் ஏற்கனவே இதே நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். அவருக்கு பணம் வசூலிக்கும் முறை தெரியும் என்பதால் திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்துள்ளனர். போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் இது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொள்ளையர்கள் 6 பேரை கைது செய்தனர்.
1. சுரே என்ற சுரேந்தர். 2. பாலாஜி. 3. பிரேம் என்ற பிரேம்குமார். 4. ஜீவா என்ற ஜீவானந்தம். இவர்கள் 4 பேரும் பாடியநல்லூரைச் சேர்ந்தவர்கள். 5. புஷ்பராஜ்-அயனாவரம். 6. விஜய் என்ற விஜயகாந்த் ஆகியோரை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாயை மீட்டனர். கொள்ளைக்கு இவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.