#Fathersday... இருக்கும்போதே போற்றுவோமே தாய், தந்தையை... !
சென்னை: இன்று தந்தையர் தினம்.. உங்களது தந்தை குறித்த உணர்வுகளை, நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நமது வாசகர்களிடம் கேட்டிருந்தோம். மலைக்க வைக்கும் வகையில் வந்து குவிந்து விட்டன வாசகர்களிடமிருந்து மெயில்கள்.
அத்தனை மெயில்களையும் படித்தபோது நமக்கு கிடைத்த உணர்வு, பெரும்பாலானோர் தந்தையை சரிவர கவனிக்க முடியவில்லை அல்லது இருந்தபோது கவனிக்காமல் விட்டு விட்டு இப்போது மிஸ் செய்கிறார்கள் என்றுதான்.
இன்றைய உலகின் எதார்த்தத்தையும் கூட நமக்கு பல மெயில்கள் உணர்த்தின. பலரால், அயல் நாடுகளில் பணி காரணமாக தந்தை, தாயுடன், குடும்பத்துடன் இருக்க முடியாமல் போய் விட்டதே, அதுவும் நெருக்கடியான நேரத்தில் இருக்க முடியாமல் போன துயரத்தின் வலியிலிருந்து அவர்களால் மீள முடியாத நிலையில் இருப்பதையும் நமக்கு உணர்த்தியது.
உண்மைதான்... நிறையப் பேருக்கு கூட இருக்கும்போது முக்கியத்துவம் தெரிவதில்லை அல்லது அந்த அன்பையும், பாசத்தையும் காட்ட முடியாத நிலையில் இருந்து விடுகிறார்கள். ஆனால் கை விட்டுப் போகும்போதுதான் அதன் மகத்துவம் புரிகிறது.. அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி, வலி, வேதனை ஆகியவை வாழும் காலம் முடிய நீண்டு நம்மை உள்ளுக்குள் அறுத்துப் போட்டு விடுகிறது.
நமக்கு மடல்கள் அனுப்பியிருந்த வாசகர்கள் பலரும் அயல்நாடுகளில் பணியில் இருப்பவர்கள்தான். தேவைப்பட்டபோது என் அப்பாவுடன் இருக்க முடியாத வலி இன்னும் என்னைக் கொல்கிறது, இன்று வரை மீள முடியாமல் இருக்கிறேன் என்று பலரும் வருத்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.
இன்னும் சிலருக்கு தந்தையைக் கவனிக்கப் போதிய வசதி இல்லாமல் போய் விட்டது. ஆனால் வசதி வந்தபோது தந்தை உடன் இல்லை என்ற பெரும் சோகம். இவர்களின் வருத்தம் மிகுந்த வேதனைக்குரியது. எல்லாம் இருந்தும் அதைப் பார்க்க, அனுபவிக்க என் தந்தை, என் பெற்றோர் உடன் இல்லை என்பது இவர்களை உள்ளுக்குள் சுழற்றியபடித்தபடியே இருக்கிறது.
முன்பெல்லாம் கூட்டுக்குடும்பங்கள் பெருகியிருந்தது. தாய், தந்தை, அக்கா, தங்கைகள், அண்ணன், தம்பி, பாட்டி, தாத்தா என குடும்பமே குதூகலமாக இருந்த காலம் அது. உறவுகள் கூடவே இருக்கும். எது நடந்தாலும் எல்லோரும் உடன் இருக்கும் சந்தர்ப்பங்களும் அதிகம். ஆனால் இன்று அப்படியா.. பிரிவுகள் படு வேகமாக நம்மை நோக்கி ஓடி வருகின்றன.. அல்லது நாம் அதைத் தேடி ஓடுகிறோம்.. புரிதல் இல்லை, விட்டுக் கொடுத்தல் விடை பெற்றுப் போய் விட்டது. புரிதல் குறையும்போது பிரிவுகள் பின்னாடியே வரத்தானே செய்யும்.
அனைவரும் தவறு செய்பவர்கள் அல்லதான்.. ஆனால் தாய், தந்தையை உடன் வைத்துக் கொள்ள வேண்டும், கடைசி வரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்போர் நிச்சயம் குறைந்து விட்டனர் என்ற எதார்த்தத்தை மறுக்க முடியாது - ஆனால் இதற்குக் காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் விஷயம், அவர்கள் உடன் இருக்கிறார்களா, இல்லையா என்பதுதான்.
இருக்கும் வரை சந்தோஷமாக வைத்திருப்போம்.. நம்மால் முடிந்தால், நம்மிடம் வசதி இருக்கிறதோ இல்லையோ அவர்களை இன்புற வைத்து நாம் அதில் சந்தோஷம் காண்போம்.. முடிகிறதோ இல்லையோ, முடிந்தவரை இருக்கும்போதே போற்றுங்கள்.. பெற்றோரை. நமக்கு முதல் முகவரியே அவர்கள்தானே.. அந்த "அட்ரஸ்" இல்லாமல் நாம் எப்படி.. ?
அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!