தூத்துக்குடியில் என்ன அமைதி நடவடிக்கை எடுக்கப்பட்டது.. தமிழக அரசிடம் மத்திய உள்துறை கேள்வி
தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யும் படி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யும் படி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் நடத்திய அமைதியான ஊர்வலத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி மக்களை கொடூரமாக கொன்றது. இந்த மோசமான துப்பாக்கி சூடு காரணமாக 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்னும் 100 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
30 பேர் வரை இதில் காணாமல் போய் இருக்கிறார்கள். இந்த மோசமான சம்பவம் தூத்துக்குடியை மட்டுமில்லாமல் மொத்த தமிழகத்தையும் நிலைகுலைய செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
தமிழக அரசு இதுகுறித்த அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை. இந்த அறிக்கையை தயார் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த படுகொலை சம்பவம் குறித்து உயர் நீதிமன்றம் அமைத்த தனிநபர் விசாரணை குழுவும் விசாரித்து வருகிறது.
தற்போது தூத்துக்குடி படுகொலை குறித்து தமிழக அரசிடம் கூடுதல் அறிக்கை கோருகிறது மத்திய உள்துறை அமைச்சகம். தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட எடுத்த நடவடிக்கை என்ன என்று அதில் விளக்கும் படி உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆலையின் பிரச்சனை, மக்கள் போராட்டத்தின் நிலை எல்லாவற்றையும் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.