மின் பற்றாக்குறை: திமுகவின் ஆலோசனையை கேட்டு மத்திய அரசு செய்யும் சதித்திட்டமே!... ஜெ. குற்றச்சாட்டு

சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து இன்று முதல்வர் ஜெயலலிதா மின்னாம்பள்ளி என்ற இடத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
நான் தமிழகத்தின் முதலமைச்சராக 3வது முறையாகப் பொறுப்பேற்று பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன.
மின்சாரத் தேவையைப் பொருத்தவரையில், தேவைக்கேற்ற மின்சார உற்பத்தியைப் பெருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் காரணமாக மின்வெட்டு படிப்படியாகக் குறைந்து கடந்த ஜூலை மாதம் முதல் மின் விநியோகம் முழுமையாக சீர்செய்யப்பட்டது.
கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் எனது தலைமையிலான அரசு மேற்கொண்ட பகீரத முயற்சியின் காரணமாக இது சாத்தியம் ஆனது. இது தொடர்பாக கடந்த கூட்டத்தொடரில் கூட பெருமையோடு நான் தெரிவித்திருந்தேன்.
ஆனால், சொல்லி வைத்தாற்போல், அதற்கு அடுத்த வாரம் முதலே பல மின் உற்பத்தி நிலையங்களில் கோளாறு ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் மின் பற்றாக்குறை மீண்டும் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள் எப்போதும் போல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் கல்பாக்கம், நெய்வேலி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையங்களில்தான் ஒரே சமயத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் அனல் மின் நிலையத்திலும் மின் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதே போல, நிலக்கரி, நாப்தா ஆகியவற்றுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் 2500 மெகா வாட் மின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைத்தான் திமுகவினர் இந்தத் தேர்தல் பிரசாரத்தில் குறை கூறி, குதர்க்கமாகப் பேசி வருகின்றனர்.
இதிலிருந்து இந்த மின் பற்றாக்குறை இயல்பாக ஏற்பட்டது அல்ல என்ற எண்ணமும், திமுகவின் மறைமுக ஆலோசனையில் பேரில் மத்திய அரசு செய்யும் சதித்திட்டம் தானோ என்ற சந்தேகமும் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசால் ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாட்டை தமிழக அரசு சவாலாக எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார். மேலும், மின் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார். இதனையடுத்து உள்ளூர் மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications