போலீஸ் போல நடித்து கோவைப் பாட்டிகளிடம் நூதன நகைக் கொள்ளை
கோவை: போலீஸ் போல நடித்து ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று வயதான பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை கோவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
முதல் சம்பவம்:
கோவை சலீவன் வீதியை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி ராமலட்சுமி (வயது 53). நேற்றுக்காலை 10.30 மணியளவில் ஓட்டலில் டிபன் பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த ராமலட்சுமியை மர்ம நபர்கள் வழி மறித்துள்ளனர். தங்களைப் போலீஸ் எனக் கூறிக் கொண்ட அவர்கள், ராமலட்சுமியிடம் பக்கத்தில் கொலை நடந்துள்ளதாகவும் அதனால் அப்பகுதி பரபரப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், நகைகளை அணிந்து கொண்டு செல்வது பாதுகாப்பானதல்ல எனக் கூறிய அவர்கள், ராமலட்சுமியின் நகைகளை கழட்டச் சொல்லி பேப்பரில் பார்சல் செய்துள்ளனர். பின்னர் அதனை ராமலட்சுமியின் பையில் போடுவது போன்று பாசாங்கு செய்து, வேறு ஒரு பார்சலைப் போட்டுள்ளனர்.
இதையறியாத ராமலட்சுமி வீட்டிற்கு வந்தவுடன் நகைப் பார்சலைப் பிரித்துப் பார்த்து அதில் கல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக அவர் பெரியகடை போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நூதன முறையில் நகைகளை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
இரண்டாவது சம்பவம்:
கோவை சம்பவத்தைப் போன்றே திருப்பூரிலும் நகையை நூதன முறையில் மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி ரோட்டில் உள்ள சுந்தரகவுண்டர் வீதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி ரங்கநாயகி (65). நேற்று இவர் காந்திபுரம் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள தம்பி வீட்டுக்கு செல்வதற்காக காந்திபுரத்தில் பஸ்சை விட்டு இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த 2 பேர் போலீசாக நடித்து அதே போல அவரிடமிருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
உடனடியாக இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
மூன்றாவது சம்பவம்:
கோவையை அடுத்த ஆலாந்துறை இருட்டு பள்ளம் அருகே உள்ள முண்டந்துறை பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி அலமேலு (60). இவர் நேற்றுக்காலை சாய்பாபாகாலனி என்.எஸ்.ஆர்.ரோட்டில் வசிக்கும் தனது சகோதரி மகளை பார்க்க நடந்து சென்றார்.அப்போது அங்கு காரில் வந்த 2 ஆசாமிகள் அதே போல போலீஸ் போல நடித்து அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று முன்தினம் மேலும் ஒரு சம்பவம்:
இதே போல நேற்று முன்தினம் கோவை ராம்நகரில் கிருஷ்ணவேணி (52) என்ற பெண்ணிடமும் மர்ம நபர்கள் 2 பேர் தாங்கள் போலீசார் என்று கூறி ஏமாற்றி அவர் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் போலீஸ் போல நடித்து நான்கு இடங்களில் வயதான பெண்களிடம் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் பறித்துச் சென்றுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இக்கொள்ளைச் சம்பவத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.