திருவள்ளூர் கட்டிட விபத்து: மீட்புப் பணியை நேரில் பார்வையிட நெல்லூர் கலெக்டருக்கு நாயுடு உத்தரவு
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 11 ஆந்திர கட்டிடத் தொழிலாளர்கள் பலியான குடோன் சுவர் இடிந்த இடத்தை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற நெல்லூர் மாவட்ட ஆட்சியாளருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி அருகே உள்ள உப்பரப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட தனியாருக்கு சொந்தமான குடோன் சுவர் மழை காரணமாக இடிந்து விழுந்ததில், அதன் அருகே குடிசை அமைத்து தங்கியிருந்த கட்டிடத் தொழிலாளர்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். இந்தக் கட்டிட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ ஐம்பதாயிரம் வழங்கவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பலியான தொழிலாளர்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இதனால், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சம்பவ இடத்தை உடனடியாக பார்வையிடும் படி நெல்லூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் படி அவருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை போரூர் மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 61 பேர் பலியானார்கள். அவர்களில் 28 பேர் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள். கடந்த 10 தினங்களுக்குள் அடுத்தடுத்து நடந்த இரண்டு கட்டிட விபத்துக்களில் 39 ஆந்திர தொழிலாளர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications