ஜேப்பியார் மகள்கள், மருமகன் மீது ரூ.150 கோடி வங்கி மோசடி புகார் - போலீஸ் வழக்கு
சென்னை: ஜேப்பியார் மகள்கள், மருமகன் உள்ளிட்டோர் மீது ரூ.150 கோடி வங்கி மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது. ஜேப்பியார் அறக்கட்டளை பெயரில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜேப்பியார் மகள் ஷீலா கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் ஜேப்பியார் ஆவார். சத்தியபாமா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் ஜோசப் பொறியியல் கல்லூரி, சத்யபாமா பொறியியல் கல்லூரி, புது கல்லூரி, செயின்ட் மேரீஸ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி, மாமல்லன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பூந்தமல்லியில் உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரி, பனிமலர் பாலிடெக்னிக் என ஜேப்பியார் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர்.
ஜேப்பியாரின் அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.
ஜேப்பியாரின் இவ்வளவு பெரிய கல்வி சாம்ராஜ்யத்துக்கு அவருடைய 4 மகள்கள்தான் வாரிசுகள். இந்த கல்வி நிறுவனங்களை ஜேப்பியாரின் மகள்கள் மற்றும் மருமகன்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் ஜேப்பியாரின் குடும்பத்தினர் சத்தியபாமா பல்கலைக்கழகத்துக்குள் இருக்கின்ற அவர்களுடைய பங்களாவில் வசித்து வருகின்றனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி முதுமையாலும் உடல்நலக் குறைவாலும் ஜேப்பியார் காலமானார். ஜேப்பியாரின் மறைவுக்குப் பிறகு ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை மூலமாக அவருடைய குடும்பத்தார் கல்வி நிறுவனங்களை தொடர்ந்து நிர்வகித்து வருகின்றனர்
இந்த நிலையில் ஜேப்பியார் ஷீலா,49 கடந்த ஜூன் மாதம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் ஜேப்பியாரின் இரண்டாவது மகளாவேன். எனக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். எனது கணவர் என்னுடன் வாழ விரும்பாமல் என்னை விட்டு பிரிந்து புனித ஜோசப் கல்லூரியை நிர்வகித்து வருகிறார்.
நான் எனது தந்தை ஜேப்பியார் இல்லமான சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் உள்ளே அமைந்துள்ள வீட்டில் வசித்து வந்தேன். எனது தந்தை இறந்த பிறகு என் தாயார் ரெமி ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் என் தாயார் ரெமி எனக்கு நல்லது செய்வது போல் என்னிடம் ஆசைவார்த்தை பேசி, எனக்கு ஜேப்பியார் எஸ்ஆர்ஆர் கல்லூரி மற்றும் மாமல்லன் கல்லூரி இவற்றை நடத்த புதிதாக ஒரு கல்வி அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி தருவதாகவும், அதற்கு கைமாறாக நான் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிரந்திர அறங்காவலர் பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
நானும் மறுப்பு தெரிவிக்காமல் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிரந்தர அறங்காவலர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டேன். பின் கடந்த ஒரு வருடத்தில் என் தாயார் ரெமி அவர் வாக்குறுதி தந்தபடி நடந்துகொள்ளும்படியும், மேலும் ஜேப்பியாரின் நான்கு பெண் வாரிசுகளில் நானும் ஒருவர் என்று எனக்கு ஜேப்பியாரின் சொத்துக்களில் மற்ற வாரிசுகளுக்கு என்ன உரிமை வழங்கப்பட்டுள்ளதோ அதேபோல் எனக்கும் வழங்கும்படி கேட்டுக்கொண்டேன்.
அதற்கு போதுமான பதில் தராமல் என் தந்தை முதலாம் ஆண்டு நிறைவு நாள் வரை அமைதியாக இருந்தனர். பின்னர் கடந்த ஜூன் 18ம் தேதி முதல் 22 ம் தேதி வரை என்னை வீட்டிற்குள் கைதியை போல் சிறை வைத்தார்கள். எனக்கு உணவு, மின்சாரம், தண்ணீர், கழிப்பிடம் செல்லவழி இல்லாமல் எல்லாவற்றையும் உள்நோக்கத்துடன் நிறுத்திவிட்டார்கள். பின் என்னை யாரும் சந்திக்க முடியாமல் எல்லாவாசல் கதவுகளையும் மூடிவிட்டார்கள். பின்னர் என்னை அடியாட்கள் மூலம் வெளியேற்றிவிட்டார்கள்.
நான் என் தந்தை சொத்துகளில் எந்த உரிமையும் கோரக்கூடாது என்ற சதிதிட்டத்தை என் குடும்ப நபர்களை எல்லோரும் சேர்ந்து உருவாக்கி என் தாயார் ரெமி மூலம் நிறைவேற்றியுள்ளார்கள். எனவே என்னால் தனியாக அவர்களிடம் போராட முடியவில்லை. எனவே நான் எனது தந்தை வாழ்ந்த இல்லத்தில் தொடர்ந்து வசிக்க போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு சமூக பாதுகாப்பு கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனிடையே ஜேப்பியார் மகள் ஷீலா கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜேப்பியார் மகள்கள், மருமகன் உள்ளிட்டோர் மீது ரூ.150 கோடி வங்கி மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது. ஜேப்பியார் அறக்கட்டளை பெயரில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.