கட்டிட விபத்தில் உருக்குலைந்த ரோஜாவின் உடல்: மோதிரம் மூலம் அடையாளம் காட்டிய சகோதரி
சென்னை: சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் சிக்கி சிதைந்து போன உடல்களை அடையாளம் காணப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த ரோஜா என்ற பெண்ணை மோதிரத்தைக் கொண்டு அடையாளம் காட்டினார் கதறி அழுதார் அவரது சகோதரி.
போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமையன்று பெய்த கனமழைக்கு 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இதுவரை 61 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த உடல்கள் அனைத்தும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை 36 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. மீதிமுள்ள 21 உடல்கள் மிகவும் உருகுலைந்து காணப்படுவதால் அடையாளம் காணுவதில் உறவினர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

குவியல் குவியலாய் உடல்கள்
சவக்கிடங்கில், சிதைந்த உடல்களின் கால்கள், கைகள் என மனித உடலின் பிற பகுதிகள் ஒரு குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சியை பார்க்கும் போது நெஞ்சை பதை பதைக்க செய்கிறது. சிதைந்த நிலையில் உள்ள உடல்களின் புகைப்படங்கள் அங்கு ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் சிதைந்த 7 உடல்கள்
முகம் சிதைந்து அடையாளம் காணவே முடியாமல் கோர நிலையில் 7 உடல்கள் உள்ளன. அப்படி இருந்த ஒரு பெண்ணின் உடலை நேற்று உறவினர்கள் அடையாளம் காட்டிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

ஆந்திரா பெண்கள்
ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் இருந்து 18 பேர் இந்த கட்டிட பணிக்கு வந்துள்ளனர். இவர்களில் கட்டிட விபத்தில் சிக்கிய 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

ரோஜாவை காணலையே
இவர்களில் திருமணமாகாத ரோஜா(20) என்ற பெண்ணையும் காணவில்லை. இந்த விபத்தில் உயிர் தப்பிய ரமாதேவியும், அவரது கணவர் ஆதிநாராயணன் என்பவரும் கடந்த 5 நாட்களாக ராயப்பேட்டை மருத்துவமனையிலேயே காத்து கிடந்தனர். தினமும் வரும் அடையாளம் தெரியாத பெண் உடலை இவர்களுக்கு மருத்துவ குழுவினர் காட்டி வருகின்றனர்.

அடையாளம் காட்டிய மோதிரம்
இந்நிலையில், சிதைந்த நிலையில் இருந்த ஒரு பெண் உடலை பார்த்து, ரமாதேவி நேற்று அழுது கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த உடலில் இருந்த உடமைகளை உற்று நோக்கி பார்த்தபோது, தனது தங்கை இல்லை என்ற முடிவுக்கு வந்தார். தனது தங்கை உயிரோடு இருக்கிறாரா? செத்துவிட்டாரா? என்று கதறி கொண்டே வெளியே வர முயன்ற போது, திடீரென அவர் தனது தங்கைக்கு வழங்கிய மோதிரம் ஞாபகத்துக்கு வந்துள்ளது. உடனே அந்த உடலில் இருந்த கையை தூக்கி விரலை பார்த்த போது அந்த மோதிரம் அப்படியே இருந்தது.

சிதைந்து போன சகோதரி
தனது தங்கை தான் என கதறி அழுததை பார்த்த போது அங்கிருந்த அனைவரும் கண்ணீர் விட்டனர். அப்போது கண்ணீருடன் பேசிய ரமாதேவி, எனது தங்கை உயிரோடு வந்து விடுவாள் என்று நம்பியிருந்தேன். அவளை அடையாளம் கூட காட்ட முடியாத நிலையில் சிதைந்த நிலையில் இறந்து விட்டாள். நான் கொடுத்த மோதிரம் இல்லாவிட்டால் ரோஜாவை யார் என்றே தெரியாமல் போயிருக்கும் '' என்று கதறினார்.

குழந்தைகள் கதி என்ன?
கட்டிடம் இடிந்த போது, மேற்புற பகுதியில் கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகள் 5 பேர் இருந்ததாக டீ விற்கும் விஜி என்ற சிறுவன் கூறியிருக்கிறார். அவர்களின் கதி என்னவானது என்பது தெரியவில்லை.

அடக்கம் செய்வது எப்படி
அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள், ஒப்பந்ததாரர்கள் மூலமாக வேலைக்கு வந்துள்ளனர். இதனால் வேலை செய்தவர்களின் முகவரி உள்ளிட்ட எந்த தகவலும் கட்டிட நிறுவனத்திடம் இல்லை. ஒப்பந்ததாரரிடமும் பணியாளர்கள் விவரம் முழுமையாக இல்லாததால் இறந்தவர்களை அடையாளம் காண்பதும், சடலங்களை அடக்கம் செய்வதும் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.












Click it and Unblock the Notifications