புத்தாண்டு 2015ஐ விடிய விடிய கொண்டாடிய சென்னை!
சென்னை: 2014-ம் ஆண்டு போன வேகம் தெரியவில்லை. இன்று 2015-ம் ஆண்டு தொடங்கிவிட்டது.
உலகமே கொண்டாடிய இந்த புத்தாண்டு பிறப்பு நிகழ்வை, சென்னை மக்களும் சிறப்பாகக் கொண்டாடினர்.
சென்னை மெரினா கடற்கரையில் வண்ண பலூன்களை பறக்கவிட்டு பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனைகள் நடந்தன.
சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் நேற்று இரவு 8 மணி முதலே மக்கள் திரளாக கூடத்தொடங்கினர். ஏராளமான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் குவிந்தனர். நேரம் செல்ல, செல்ல மெரினாவில் உற்சாக வெள்ளம் கரை புரண்டது. நள்ளிரவு சரியாக 12 மணிக்கு அவர்கள் வண்ண பலூன்களை பறக்கவிட்டும், வெடிகள் வெடித்தும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் ‘ஹேப்பி நியூ இயர்' என்று வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
சென்னையில் உள்ள பல நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்துடன் கேளிக்கை நடனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரவு 9 மணிக்கு தொடங்கிய நடனம் விடிய, விடிய நடந்தது. இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் அவர்கள் கேக் வெட்டி, ஹேப்பி நியூ இயர் என்று கோரசாக குரல் எழுப்பி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பல நட்சத்திர ஓட்டல்களில் நடந்த நிகழ்ச்சிகளில் தம்பதிகளாகவும், காதல் ஜோடிகளாகவும் பலர் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடி களித்தனர்.
புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. நள்ளிரவில் சாந்தோம் தேவாலயம், அடையார் தேவாலயம், நுங்கம்பாக்கம் தெரசா தேவாலயம், பரங்கிமலை தேவாலயம் உள்பட சென்னையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனைகளில் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் குடும்பத்துடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
மைலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அஷ்டலட்சுமி கோவில், வடபழனி முருகன் கோவில், தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் உள்பட பல கோவில்களிலும் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்த கோவில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்த புத்தாண்டு மன அமைதியையும், வளமும் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்று அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை முதலே டாஸ்மாக் மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மதுவகைகளை அட்டைப் பெட்டிகளில் வாங்கிய காட்சிகளையும் காணமுடிந்தது. அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு மதுவிருந்து அளித்து புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் வாகனங்களில் சென்றவர்களும் வழியில் காண்போருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை கூறிச் சென்றனர். இதனால் நள்ளிரவு நேரத்திலும் கடற்கரை சாலை, அண்ணா சாலை போன்ற முக்கிய சாலைகளில் வழக்கத்தைவிட அதிகமான போக்குவரத்து இருந்தது. போலீசாரும் ஆங்காங்கே நின்று அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டுவிடாதபடி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு அவர்களும் தங்கள் வாழ்த்துகளைச் சொல்லத் தவறவில்லை.