சென்னையில் ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு.. 10,000 வீடுகளை ஒதுக்கி ஜெ. உத்தரவு
சென்னை: அடையாறு, சைதாப்பேட்டையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. அகற்றப்பட்ட வீடுகளுக்கு பதிலாக மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத கனமழையால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாலங்களையொட்டி இருக்கும் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சைதாப்பேட்டையில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் பாலத்தையொட்டி இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளுக்குள் புகுந்தது. இந்நிலையில் முதல்கட்டமாக சைதாப்பேட்டை ஆத்துமா நகரில் இருந்த 200 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த 115 குடும்பங்களை அப்புறப்படுத்தும் பணி இன்று துவங்கியது. அவர்கள் அனைவரும் துரைப்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் துரைப்பாக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
அடையாறு:
இதற்கிடையே, அடையாறு கரையோரத்தில் இருந்த வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வெள்ளத்தால் சென்னை மாநகரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் அதிகமான அளவு ஏழை மக்களின் வீடுகள் பாதிப்பு அடைந்தன. வெள்ளத்தால் வீடு இழந்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கிலும், மழைநீர் முறையாக செல்ல வழிவகை ஏற்படுத்தும் பொருட்டும், அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய கரையோரங்கள் ஆகியவற்றில் குடிசைகளில் வசித்த மக்களுக்கு குடிசைகளுக்கு மாற்றாக நிரந்தர வீடுகள் வழங்கிடவும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் புதிதாக 50,000 வீடுகளும், அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் 50,000 வீடுகளும் கட்டித்தரப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 10,000 அடுக்குமாடி குடியிருப்புகளை அடையாறு கரையோரங்களில் குடிசை வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் அடையாளமாக 5 குடும்பங்களுக்கு ஜெயலலிதா இன்று ஒதுக்கீட்டு ஆணையினை வழங்கினார்.
இந்த குடியிருப்புகள் ஒவ்வொன்றும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை, குடிநீர் வசதி, மின்சார வசதி, மின்விசிறி ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீரகற்று வசதிகள், சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, குப்பைத் தொட்டிகள், தெரு மின்விளக்குகள், கான்கிரிட் நடைபாதை, ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், நியாயவிலைக் கடைகள், பாலர் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, பேருந்து வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்படும் போது அவர்கள் தங்களது உடைமைகளை தற்போதுள்ள இடத்திலிருந்து மறு குடியமர்வு பகுதிக்கு கொண்டு செல்ல 5000 ரூபாய் இடமாற்றப் படியாகவும், மாதம் 2500 ரூபாய் வீதம், ஓராண்டிற்கு 30 ஆயிரம் ரூபாய் பிழைப்புப் படியாகவும் வழங்கப்படும். மறுகுடியமர்வு செய்யும் முதல் மூன்று தினங்களுக்கு உணவு மற்றும் குடிநீரும் அக்குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
இக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவதோடு, வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலை வாய்ப்பு பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்தக் குடியிருப்புகளில் குடியேறும் குடும்பங்களுக்கு உடனடியாக குடும்ப அட்டைகள் முகவரி மாற்றம் செய்து தரப்படுவதோடு, அனைத்து மாணவ மாணவியரும் இக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உடனடியாக சேர்த்துக் கொள்ளப்படுவர். மேலும், இக்குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.