விமான நிலையம் மூடப்பட்டதால் வெள்ளத்தில் சிக்கிய தம்பதி... 5 நாட்களுக்குப் பின் உடல்கள் மீட்பு
சென்னை: கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்கான டெல்லி புறப்பட்ட தலைமை ஆசிரியை, சென்னை விமான நிலையம் மூடப்பட்டதால் வீடு திரும்பியபோது கணவருடன் வெள்ளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ராஜாஜி அவென்யூவைச் சேர்ந்த மத்திய அரசின் காற்றாலை நிறுவன ஊழியர் மருதநாயகம் (37). இவரது மனைவி நிர்மலா புஷ்பம் (33), அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் உதவி தலைமை ஆசிரியையாக பணி புரிந்து வந்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த இத்தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் கடந்த 2-ம் தேதி நடக்க இருந்த சர்வதேச பள்ளிகள் கருத்தரங்கில் நிர்மலா புஷ்பம் கலந்து கொள்ள இருந்தார். எனவே விமானம் மூலம் அவர் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்கென கடந்த 1ம் தேதி இரவு தனது கணவருடன் வாடகைக்காரில் அவர் விமான நிலையம் புறப்பட்டார்.
ஆனால் சென்னை விமானம் நிலையம் பலத்த மழையால் அன்று இரவு மூடப்பட்டது. இதையடுத்து இருவரும் விமான நிலையத்தில் இருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பலத்த மழை பெய்ததால் கோவிலம்பாக்கம் ஈச்சங்காடு பகுதியில் வாடகை காரை நிறுத்திவிட்டு, இருவரும் இறங்கி நடந்தனர். அப்போது ஈச்சங்காடு பகுதியில் இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் நிர்மலா மற்றும் அவரது கணவரின் உடல்கள் மீட்கப்பட்டது. முதலில் இறந்தவர்கள் யார் என்பது பற்றிய விவரம் எதுவும் தெரியாமல் இருந்தது. பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் அவை அடையாளம் காணப்பட்டது.
இதனிடையே, டெல்லி புறப்பட்ட தம்பதிக்கு என்ன ஆனது எனத் தெரியாமல், தவித்து வந்த தம்பதியின் குடும்பத்தினர் போலீசாரின் தகவலால் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் பிரேத பரிசோதனைகளுக்குப் பின்னர் இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. கணவன்- மனைவி ஆகிய இருவரின் உடல்களும் அவர்களுடைய சொந்த ஊரான தூத்துக்குடிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.
இதேபோல், மேடவாக்கம் அருகே உள்ள கோவிலஞ்சேரியை சேர்ந்த வங்கி ஊழியர் ராபர்ட் மோசஸ் பென்சிகா (32). கடந்த 1-ம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய ராபர்ட் மாயமானார்.
மழைநீர் வடிந்ததும் சித்தாலபாக்கம் ஏரி அருகே அவரது மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராபர்ட்டின் உடலைத் தேடும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் தீவிர முயற்சியால் நேற்று ராபர்ட்டின் உடல் மீட்கப்பட்டது.
நிர்மலா தம்பதி, ராபர்ட் ஆகியோரையும் சேர்த்து சென்னை புறநகர் பகுதிகளான நந்தம்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தில் மூழ்கி பலியான 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.