ஓபிஎஸ் உள்பட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு: பிப். 5-க்குள் பதில் அளிக்க உத்தரவு
ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கானது சென்னை ஹைகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.
சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடுத்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் ஓபிஎஸ் தரப்பினர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரிந்திருந்த அதிமுகவின் இரு அணிகளும் தினகரனையும், சசிகலா தரப்பையும் ஒதுக்கி வைத்து விட்டு ஒன்றாக இணைந்தன. இதனால் தினகரனுக்கு ஆதரவாக 18 எம்எல்ஏக்கள் செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என கூறி அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் 18 எம்எல்ஏக்களும் கடிதம் கொடுத்தனர். ஆனால் அவர்கள் கட்சி கொறடா உத்தரவை மீறியதாக கூறி சபாநாயகர் அந்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தார்.
இதுதொடர்பாக அந்த 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்நிலையில் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டிருந்தபோது முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
அப்போது தனி அணியாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் அதிமுக அரசுக்கு எதிராகத்தான் வாக்களித்தனர். தற்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தவுடன் ஓபிஎஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொறடா உத்தரவை மீறியதாக 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது போல் அதிமுக கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் அதன் கொறடா சக்ரபாணி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் வழக்கறிஞர் கபில் சிபலும், அரசு சார்பில் வழக்கறிஞர் வைத்தியநாதனும் ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பினர் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கை பிப்ரவரி 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.