ஜெயலலிதா ஒரு கேள்விக்குறி- உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
ஜெயலலிதா ஒரு கேள்விக்குறி என்று உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதா ஒரு கேள்விக்குறி, அவரது மரணமும் ஒரு கேள்விக்குறி, சைலஜா ஒரு கேள்விக்குறி, அம்ருதா ஒரு கேள்விக்குறி என்று உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார்.
ஜெயலலிதா இறந்தவுடன் அவரது வாரிசு என கூறி சிலர் கிளம்பியுள்ளனர். அவர்களுள் பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் அவர் தான்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்றும் அதற்காக டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து வைஷ்ணவ முறைபடி சடங்கு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
வழக்கறிஞர்
இது தொடர்பான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் வரும் போதெல்லாம் நீதிபதி கிருபாகரன் சரமாரியான கேள்விகளை எழுப்புவார். அதன்படி இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அம்ருதா தரப்பு வழக்கறிஞர் பிரகாஷ் வாதம் செய்தார்.
ரகசியம்
அவர் கூறுகையில் சைலஜா ஜெயலலிதாவின் சகோதரிதான். ஜெயலலிதாவின் தாய் சந்தியாவுக்கு 3 வாரிசுகள் உண்டு. அவர்கள் ஜெயக்குமார், ஜெயலலிதா, சைலஜா ஆகியோர் ஆவர். பெங்களூருவில் அமிர்தாவை ரகசியமாக வளர்த்து வந்தார் சைலஜா.
அமிர்தாவும் கேள்விக்குறி
சைலஜாவின் கணவர் சாரதிதான் ஜெயலலிதாவின் வாரிசு அமிர்தா என்ற உண்மையை கூறினார் என்றார் பிரகாஷ். அப்போது பேசிய நீதிபதி ஜெயலலிதா வழக்கில் எல்லாம் கேள்விக்குறிதான். ஜெயலலிதா மரணமும் கேள்விக்குறி, சைலஜாவும் கேள்விக்குறி, அமிர்தாவும் கேள்விக்குறி என்றார்.
சடலம் தோண்ட வேண்டும்
ஜெயலலிதாவின் சடலத்தை தோண்டி வைஷ்ணவ முறைபடி சடங்கு செய்ய வேண்டும் என்று அம்ருதா கூறியபோது ஜெ,வின் சடலத்தை தோண்டி எடுக்கலாமே என்று நீதிபதி கிருபாகரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.