சென்னை சில்க்ஸ் தீவிபத்து... அரசு உரிய பதில் அளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை சில்க்ஸ் தீவிபத்து குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சென்னை சில்க்ஸ் தீவிபத்து விவகாரத்தில் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸின் பிரம்மாண்டமான 7 அடுக்கு மாடி கட்டடத்தில் கடந்த 31-ஆம் தேதி அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தீயை அணைக்க 60 வாகனங்கள், 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் 40 மணி நேரம் போராடினர்.
இதைத் தொடர்ந்து கரும்புகை சூழ்ந்து கட்டடம் விரிசல் அடைந்ததால் கட்டடத்தின் 4 மாடிகளும் ,முன்பகுதியும் சரிந்து விழுந்தது. இதனால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால் அதை இடிக்கும் பணிகள் 4-ஆவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
விதிமீறல் கட்டடம்
இந்நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டடம் கட்ட 4 மாடிகளுக்கு மட்டுமே சிஎம்டிஏ அனுமதி கொடுத்ததாகவும், ஆனால் அந்த நிறுவனமோ 7 மாடிகளை அனுமதியின்றி கட்டிக் கொண்டதாகவும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். மேலும் கடந்த 2011-இல் சென்னை சில்கஸ் கட்டடத்தை இடிக்க நோட்டீஸ் வழங்கியபோது அதை நீதிமன்றத்தில் சென்று தடை உத்தரவு பெற்றதாகவும் தெரிவித்தார்.
பெரும் ஆபத்து தவிர்ப்பு
சென்னை சில்க்ஸில் அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதே வேலை நேரங்களில் தீவிபத்து ஏற்பட்டிருந்தால் எத்தனை உயிர் இழப்புகள் நடந்திருக்கும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடிவில்லை. மேலும் 2 நாள்களாக தீப்பிடித்து எரிந்த கட்டடம், முழுவதும் தானாக இடிந்து விழுந்திருந்தால் எத்தனை சேதங்கள் நடந்திருக்கும் என்பதை நினைத்தாலே அப்பகுதிவாசிகளுக்கு பீதி ஏற்படுகிறது.
ஐகோர்டில் வழக்கு
இந்த நிலையில் சென்னை சில்க்ஸ் மட்டுமல்லாமல் திநகரில் விதிகளை மீறி ஏராளமான கட்டடங்கள் உள்ளதாகவும், சென்னை சில்க்ஸ் தீவிபத்துக்கு அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
தமிழக அரசுக்கு உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து தமிழக அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்றார். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தார்.