ஆர்.கே நகரில் நேர்மையான முறையில் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆர்.கே நகரில் நேர்மையான முறையில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலை எந்தவித சமரசத்திற்கும் இடமின்றி நேர்மையாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பையும் மீறி அங்கு பணப்பட்டுவாடா நடந்துவருவதாக தி.மு.க தொடர்ந்து புகார் அளித்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில், ஆர்.கே நகரில் நடக்கும் பணப்பட்டுவாடாவை தவிர்க்க கூடுதல் ராணுவப் படை வரவழைக்கப்பட வேண்டும் என்றும், தொகுதி முழுவதிலும் உள்ள அனைத்து தெருவுக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் அந்த வழக்கில் தெரிவித்து இருந்தார்.
வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்பு
அந்த வழக்கு இன்று நீதிபதி ரவிச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தரப்பில் கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகினார். அப்போது, ஆர்.கே நகரில் மொத்தம் 969 தெருக்கள் உள்ளன. அனைத்திலும் கேமரா பொருத்தி கண்காணிப்பது மிகவும் சிரமமானது என்றார். இதற்கு பதிலாக தேர்தல் நடைபெறும் போது வாக்குமையத்தில் இருந்து நேரடியாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்குப்பதிவு ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
வாக்காளர்கள் தவறாக சித்தரிப்பு
தேர்தல் பாதுகாப்பு பணிக்காகவும், முறைக்கேடுகளைத் தவிர்க்கவும் 15 கம்பெனி துணை ராணுவப் படை பணியில் அமர்த்தப்பட்டு இருப்பதாவும், வரலாற்றிலேயே முதல் முறையாக இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிக்கு 7 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யும் நோக்கிலேயே இந்த வழக்கை தி.மு.க வேட்பாளர் தொடர்ந்து உள்ளார் என்றும், ஒவ்வொரு வாக்காளர்களையும் ஓட்டுக்காக லஞ்சம் பெறுவதாக இந்த வழக்கில் அவர் சித்தரித்து உள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.
தி.மு.க தரப்பு புகார்
இதற்கு பதிலளித்த தி.மு.க தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன், தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் அறிக்கையை ஏற்க முடியாது. ஏனெனில், ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு பார்வையாளர் விக்ரம் பத்ரா வந்த அன்று ரூபாய் 100 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை படித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும்' என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை சிறிது நேரத்துக்கு தள்ளிவைத்தனர். பின்னர் இந்த வழக்கை நீதிபதி விசாரணைக்கு எடுத்தார். அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறினார்.
நேர்மையான முறையில் தேர்தல்
மேலும்,இந்த இடைத்தேர்தலில் சட்டத்தை மீறி செயல்படுபவர்கள், ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை கொடுப்பவர்கள் மீது இரும்புக் கரம் கொண்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தி உள்ளார்.