நெருங்குகிறது கிளைமேக்ஸ்.. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு
Recommended Video
சென்னை: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த வழக்கில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது சென்னை ஹைகோர்ட்.
தினகரனுக்கு ஆதரவாக திரண்டு, எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.
இதை எதிர்த்து, ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் பதவி பறிப்புக்கு ஆளான எம்எல்ஏக்கள். இந்த வழக்கில், சபாநாயகர் தரப்பு மற்றும் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பின் வாத பிரதிவாதங்கள் நிறைவடைந்தன.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்த நிலையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது. அனைத்து தரப்பினரும் ஏற்கனவே எழுத்துப்பூர்வ வாதங்களையும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கூடுதல் விவரங்களை அளிக்க வேண்டும் என்றால், திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திங்கள் கிழமைக்கு பிறகு தீர்ப்பு
எனவே அடுத்த வாரம் திங்கள்கிழமைக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வெளியாகலாம். இந்த தீர்ப்பு தினகரன் தரப்புக்கு ஆதரவாக வந்தால், 18 எம்எல்ஏக்களும் அரசுக்கு ஆதரவு இல்லை என கூறி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரலாம்.
சமரசம் செய்ய வாய்ப்பு
18 எம்எல்ஏக்களும் தினகரனுடன் சேர்த்து 19 எம்எல்ஏக்களும், அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினால் பெரும்பான்மை இன்றி அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க தினகரன் அணியுடன் சமரசம் செய்ய வேண்டிய நிலை ஆளும் கட்சி தலைவர்களுக்கு ஏற்படும். அது எந்த மாதிரியான சமரசம் என்பது தெரியாது.
பரபரப்பு சூழல்
ஒருவேளை சமரசத்திற்கு ஆளும் தரப்பு தயாரில்லை என்றாலோ அல்லது சமரசத்தால் தினகரன் தரப்பு திருப்தியடையாவிட்டாலோ ஆட்சியை கலைக்க அத்தரப்பு முயலும். இதனால் மீண்டும் பரபரப்பான அரசியல் சூழல் தமிழகத்தில் உருவாகும். எனவே இந்த தீர்ப்புக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றன.