15 முறை குறைப் பிரசவம் ஆன 39 வயதுப் பெண்ணுக்குப் பிறந்த அழகிய பெண் குழந்தை!
சென்னை: 15 முறை குறைப் பிரசவம் நடந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 39 வயதுப் பெண் தற்போது அழகான பெண் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றுள்ளார். இதனால் இவரது குடும்பமே மகிழ்ச்சியி்ல் மூழ்கியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மனைவி அபிராமி (39). இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகளாகிறது. அபிராமிக்கு திருமணத்திற்குப் பிறகு ஒரு முறை, இரு முறை அல்ல, 15 முறை கருத்தரித்து குறைப் பிரசவம் ஏற்பட்டது. இதனால் அவர் மிகவும் மனம் உடைந்து போனார்.

இந்த நிலையில் சென்னை வட பழனியில் உள்ள ஆகாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெயராணி காமராஜ் சிகிச்சை அளித்து வந்தார். அவரது சிகிச்சையின் பலனாக அபிராமி கருத்தரித்தார். கடந்த 27ம் தேதி அபிராமிக்கு ஆகாஷ் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து ஆகாஷ் குழந்தையின்மைக்கான மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ் கூறுகையில், ஏறக்குறைய 13 முறை கர்ப்பம் தரித்து குறை பிரசவத்தால் பாதிப்படைந்து வந்த நிலையில் 2011 ம் ஆண்டில் ஆகாஷ் மருத்துவமனைக்கு வந்த அபிராமிக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து ஆராய்ந்து சிகிச்சை அளிப்பதற்குள் அவர் கர்ப்பம் தரித்து 13வது வாரத்திலேயே குறைப் பிரசவம் ஏற்பட்டது.

அதற்கு அடுத்த ஆண்டிலும் கர்ப்பப்பை வாயில் தையல் போட்டு தீவிர சிகிச்சை அளித்தும், மறுபடியும் 7வது மாதத்தில் குறைப் பிரசவம் ஆகி குழந்தை இறந்தது.
இப்படி தொடர்ச்சியாக 15 முறை குறை பிரசவத்தால் பாதிக்கப்பட்டு வந்த அபிராமிக்கு கர்ப்பப்பையில் நிறைமாதம் வரை சுமந்து குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பே இல்லை என்று மகப்பேறு மருத்துவ வல்லுனர்கள் பலரும் கருத்து கூறி வந்த நிலையில், அந்த பெண்மணியும் விடாப்பிடியுடன் எப்படியேனும் தன் கர்ப்ப பையிலேயே சுமந்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எங்களிடம் வற்புறுத்தினார்.
குழந்தையில்லா பிரச்சினையால் குடும்பத்தில் ஏற்பட்ட பல்வேறு சவால்களையும் எதிர் கொண்டு ஸ்ரீதர்- அபிராமி தம்பதியர் மேற்கொண்ட முயற்சிகள் வீண் போகவில்லை. அதே சமயத்தில் மருத்துவ ரீதியாக பார்க்கப்போனால் உலகில் வேறு எங்கும் 15 முறை குறை பிரசவத்தால் பாதிப்படைந்து 16வது முறை நிறைமாத குழந்தை பெற்றெடுத்ததாக மருத்துவ சான்றுகள் இல்லை என்றார் டாக்டர் ஜெயராணி.
தாயும், சேயும் தற்போது நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications