பிளஸ்டூ தேர்ச்சி- சிவகங்கை, தர்மபுரியை விட பின் தங்கிய சென்னை.. தொடரும் சோகம்
சென்னை: வழக்கம் போல பிளஸ்டூ தேர்ச்சியில், இந்த ஆண்டும் முதல் 3 இடங்களுக்குள், ஏன் முதல் பத்து இடங்களுக்குல் கூட தலைநகர் சென்னை வரவில்லை.
மிகவும் பின்தங்கிய மாவட்டங்களெல்லாம் சென்னைக்கு முன்பு கம்பீரமாக நிற்கும் நிலையில் 91 சதவீத தேர்ச்சியுடன் சென்னை பின் தங்கி நிற்கிறது.
அருமையான கல்விக் கூடங்கள், உயிரைக் கொடுத்துக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள், பிள்ளைகளின் படிப்புக்காக மெனக்கெடும் பெற்றோர்கள் என எல்லா வசதிகள் இருந்தும் சென்னை மாணவர்கள் ஏன் தேர்ச்சியில் தொடர்ந்து சரிவைச் சந்திக்கிறார்கள் என்பது புரியவில்லை.
டாப் 3 கனவாப் போச்சு
தேர்ச்சி விகிதத்தில் ஒரு காலத்தில் தமிழகத்திலேயே டாப்பில் இருந்த மாவட்டம் சென்னைதான். முதல் 3 இடங்களைத் தாண்டியும் அவர்கள்தான் எப்போதும் கோலோச்சுவார்கள். ஆனால் இன்று டாப் 3க்குள் சென்னை மாணவர்கள் வருவதே அரிதாகிப் போயுள்ளது.
நாமக்கல் - விருதுநகர்
பல வருடமாகவே அதாவது 25 ஆண்டுகளாக விருதுநகர்தான் முதலிடத்தை வகித்து வந்தது. இந்த முறைதான் அது 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஈரோடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. நாமக்கல் 2வது இடத்திற்கு வந்துள்ளது.
பிரமாத ஈரோடு
ஈரோடு மாவட்ட மாணாக்கர்கள் இந்த முறை 97.05 சதவீதத்துடன் அசத்தியுள்ளனர். நாமக்கல் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.5 ஆக உள்ளது. விருதுநகரின் தேர்ச்சி 96.12 சதவீதம் ஆகும்.
தலைநகர் சென்னை எங்கே
தலைநகர் சென்னையின் தேர்ச்சி விகிதமானது 91 சதவீதமாக உள்ளது. முதல் பத்து இடங்களுக்குள் அது இல்லை. இது சோர்வைத் தருவதாக உள்ளது.
சிவகங்கையை விட குறைவு
சென்னையை விட மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள் கூட தேர்ச்சியில் அசத்தியுள்ளன. குறிப்பாக சிவகங்கை மாவட்டம் 93.4 சதவீத தேர்ச்சியைக் கண்டுள்ளது. தர்மபுரியோ 93.24 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளது.
அட ராமநாதபுரம் கூட முன்னாடி இருக்கேப்பா...
தண்ணி இல்லாக் காடு என்று வர்ணிக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டம் கூட 93.06 சதவீத தேர்ச்சியைக் காட்டியுள்ளது. தூத்துக்குடியோ 95.72 சதவீத தேர்ச்சியுடன் உள்ளது.
சென்னைக்கு என்னாச்சு
சென்னை மாவட்டமோ தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தில் டாப் 3க்குள் வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது - பல வருடங்களாகவே.
கவனச் சிதறல்
சென்னை மாணவர்களிடையே கவனச் சிதறல்கள்தான் அதிகமாக உள்ளன. அதற்கான சூழல்களும் அதிகமாக உள்ளது. இதுவே அவர்கள் படிப்பில் பின்தங்க முதல் காரணம் என்று சொல்கிறார்கள்.
இனிமேலாவது சுதாரிப்பார்களா...
தலைநகர மாணவர்கள் எப்போதும் தலை சிறந்த மாணவர்கள் என்ற பெருமையை மீண்டும் பெறும் வகையில் வரும் ஆண்டுகளிலாவது சென்னை மாணவர்கள் கடுமையாக உழைத்து கலக்குவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏக்கப் பெருமுச்சுடன் வருடா வருடம் இருந்து கொண்டே இருக்கிறது.