ஜிஎஸ்டி எதிரொலி.. வெறிச் சோடிய சென்னை தியேட்டர்கள்.. 'மால்'கள்... வணிகர்கள் புலம்பல்
சென்னையில் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டதால் ‘மால்’களில் கூட்டம் குறைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் புலம்புகிறார்கள்.
சென்னை: ஜி.எஸ்.டி.யை எதிர்த்து சென்னையில் தியேட்டர்கள் நேற்று முதல் மூடப்பட்டு இருப்பதால் மால்கள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் வணிகர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி. வரியால் பொதுமக்கள் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹோட்டல் உணவுகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதன்மையானதாக திகழும் தியேட்டர்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தமிழக அரசும் கேளிக்கை வரியாக 30 சதவீதம் விதித்துள்ளது. இதனால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 58 சதவீதம் அளவுக்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
சொகுசு தியேட்டர்களுக்கே வரவேற்பு
சென்னையை பொறுத்த வரையில் பெரிய மால்களில் செயல்படும் சொகுசு தியேட்டர்களுக்கே வரவேற்பு அதிகமாகும். விலை 100 ரூபாயை தாண்டி இருந்தாலும் மால் தியேட்டர்களில் படம் பார்ப்பதையே பொதுமக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
மால் தியேட்டர்கள்
ராயப்பேட்டையில் ‘எக்ஸ்பிரஸ் அவென்யூ', அமைந்தகரையில் ‘ஸ்கைவாக்‘, புரசைவாக்கத்தில் ‘அபிராமி மால்', வேளச்சேரியில் ‘பீனிக்ஸ் மால்' பெரம்பூரில் ‘எஸ்-2' வணிக வளாகம் என சென்னையில் ஏராளமான மால் தியேட்டர்கள் உள்ளன.
கூட்டம் அலை மோதும்
மால்களில் 4 அல்லது 5 தியேட்டர்கள் செயல்படும். அதோடு உணவகங்கள், ஆடையகங்கள், அழகு நிலையங்கள், குழந்தைகளை கவரும் விளையாட்டு உலகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் மால்களில் இருக்கும். அதனால் எப்போதும் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் ஜி.எஸ்.டி. மற்றும் கேளிக்கை வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நேற்று முதல் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
வெறிச்சோடிய மால்கள்
இதனால் நேற்று சென்னையில் உள்ள அனைத்து மால்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. மால்களில் உள்ள கடைகளில் வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர். இன்று 2-வது நாளாகவும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் மால்கள் கூட்டமின்றி வெறிச்சோடி போயுள்ளன.
வணிகர்கள் புலம்பல்
சினிமா பார்க்க செல்பவர்கள் மால்களில் உள்ள கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவது வழக்கம். 2 நாட்களாக மால்களில் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் அங்குள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.