மவுசு போச்சு: காத்து வாங்கும் சென்னை மெட்ரோ ரயில்கள்
சென்னை: துவங்கப்பட்ட 4 மாதத்திற்குள் சென்னை மெட்ரோ ரயில்களில் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.
பெரும் ஆரவாரத்தோடு தொடங்கப்பட்ட இந்தப் போக்குவரத்துக்கு மக்கள் மத்தியில் மவுசு குறைந்து விட்டதாகவே தெரிகிறது.
ஆரம்பத்தில் இருந்த கூட்டம், அலை மோதல் இப்போது இல்லை. படிப்படியாககுறைந்து போய் விட்டது.
மக்கள் எதிர்பார்ப்பு
சென்னைக்கு மெட்ரோ ரயில் எப்பொழுது வரும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் முதல்கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி துவங்கி வைத்தார்.
கோயம்பேடு டூ ஆலந்தூர்
கோயம்பேடு-ஆலந்தூர் இடையே தினமும் காலை 9 மணி முதல் இரவு 9.40 மணி வரை 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. அதே போன்று ஆலந்தூர்-கோயம்பேடு இடையே காலை 6.03 மணி முதல் இரவு 10.03 மணி வரை 97 முறை மெட்ரோ ரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது.
போட்டி போட்டுக் கொண்டு வேடிக்கை
மெட்ரோ ரயில் சேவை துவங்கிய புதிதில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு அதில் பயணம் செய்தனர். ஆனால் மெட்ரோ ரயில் டிக்கெட் விலை அதிகமாக உள்ளதால் மக்கள் பழையபடி பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோக்களை தேடிச் சென்றுள்ளனர்.
கூட்டம் இல்லை
இதனால் மெட்ரோ ரயில்களில் கூட்டமே இல்லாமல் உள்ளது. வெளியூர்களில் இருந்து சென்னையை சுற்றிப் பார்க்க வருபவர்கள் தான் தற்போது மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.
கட்டணம் குறைந்தால் நல்லது
மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். மேலும் இந்த ரயில் பாதை மேலும் நீட்டிக்கப்படும்போது மக்கள் கூட்டம் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.