சென்னை ஓபன் டென்னிஸ்… ரூ.2 கோடி நிதி அளித்தார் ஓ.பன்னீர்செல்வம்
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்த தமிழக அரசின் பங்களிப்பாக ரூ. 2 கோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
சென்னை: 2017ம் ஆண்டிற்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்த தமிழக அரசின் சார்பில் கோடி ரூபாயை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் எம்.ஏ. அழகப்பனிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்தார்.
டென்னிஸ் விளையாட்டில் உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் மிக முக்கிய போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தால் ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றது. இப்போட்டி ஏ.டி.பி. பன்னாட்டு தரவரிசை போட்டிகளில் ஒன்றாகும்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், 2012ம் ஆண்டு சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறப்பாக நடத்த தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்த 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. இந்தத் தொகை ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று 2 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் எம்.ஏ. அழகப்பனிடம் வழங்கினார். இந்த நிகழ்வின் போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடன் இருந்தார்.
உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களோடு, இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களும் பங்கு கொள்ளும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் விளையாட்டு அரங்கில் ஜனவரி 2ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.