சென்னையில் சைரன் வைத்த காரில் சென்ற போலி ஐபிஎஸ் அதிகாரி கைது: உடனிருந்த துணை நடிகை தப்பியோட்டம்
சென்னை: ராஜிவ் காந்தி சாலையில் போதையில் தாறுமாறாக காரை ஓட்டி வந்த நபர் கைது செய்யப்பட்டபோது அவர் போலி ஐஏஎஸ் அதிகாரி என தெரியவந்தது. காரில் அவருடன் இருந்த துணை நடிகை தப்பியோடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜிவ் காந்தி சாலையின், பெருங்குடி சுங்கச்சாவடி அருகே துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசார், வழக்கம்போல நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சோழிங்கநல்லூரிலிருந்து சென்னையை நோக்கி சைரன் வைக்கப்பட்ட கார் ஒன்று, நம்பர் பிளேட் இல்லாமல் தாறுமாறாக வந்துகொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். இதனால், போலீசார் அந்த காரை நிறுத்துமாறு சைகை செய்தனர்.
போலீசாரை பார்த்ததுமே, கார் மேலும் தாறுமாறாக தடுமாறி, சாலை தடுப்புகள் மீது மோதி நின்றது. அதிலிருந்து காரை ஓட்டி வந்த நபர் போதையில், தள்ளாடியபடி இறங்கினார்.
அந்த நபரிடம் விசாரித்தபோது, தன்னை கார்த்திகேயன் (30) என்றும், தான் கோவையை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும், காரில் தன்னுடன் அமர்ந்துள்ள பெண் தனது மனைவி, அவர் கேரள ஆளுநரின் மகள் என்றும் கூறி உள்ளார்.
அவரது பேச்சிலும், நடத்தையிலும் சந்தேகம் அடைந்த போலீசார் கோவை காவல் நிலையத்திற்கு, அவரது போட்டோவை அனுப்பி வைத்து, விவரம் கேட்டுள்ளார். அவர்கள், கார்த்திகேயன் ஐஏஎஸ் அதிகாரி இல்லை என கூறியுள்ளனர்.
இதையடுத்து, இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். சிக்கிக்கொள்வோம் என தெரிந்ததும், காரில் இருந்த பெண் இறங்கி தப்பி ஓடினார்.
இதையடுத்து துரைப்பாக்கம் போலீசிடம் கார்த்திகேயன் ஒப்படைக்கப்பட்டார். தீவிர விசாரணையில் அவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி இல்லை என்பதும், அவருடன் வந்த பெண் துணை நடிகை என்றும் தெரியவந்தது. தப்பி ஓடிய துணை நடிகையை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications