சென்னை சில்க்ஸ் 27 மணிநேரமாக கொழுந்துவிட்டெரியும் தீ.... கட்டிடம் இடிக்கப்படுகிறது? - வீடியோ
சென்னை சில்க்ஸில் 27 மணி நேரத்துக்கும் மேலாக தீ பற்றி எரிவதால் கட்டிடத்தை இடிப்பது என மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை: சென்னை. தி.நகரிலிருக்கும் சென்னை சில்க்ஸ் கடையில் 24 மணி நேரத்துக்கும் மேலாக கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க 150க்கும் மேற்படட் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தொடர்ந்து தீ எரிந்து வருவதால் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தி.நகரில் நேற்று அதிகாலை 4 மணியளவில் குமரன் சில்க்ஸ் துணிக்கடையில் பற்றிய தீ, அருகில் இருந்த சென்னை சில்க்ஸ் கடைக்கும் பற்றியுள்ளது. அப்போதிலிருந்து 27 மணி நேரமாக தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. புகை அந்த பகுதி முழுவதும் பரவி வருகிறது.
சென்னை சில்க்ஸ் 7 மாடிக் கட்டிடம் என்பதால் தரைதளத்திலிருந்து ஒவ்வொரு மாடியாக தீ பரவிவருகிறது. அங்கு கட்டிடங்கள் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக இருப்பதால் தீயை அணைப்பதும் கடினமாக உள்ளது.
நேற்று தீயணைப்புத் துறைக்கு தகவல்தெரிவிக்கப்பட்டதும் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளும் 150 தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து தீயணைக்கும் பணியில் 27 மணிநேரத்துக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் துணிக்கடை என்பதால் அவர்களால் தீயை உடனே கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
சென்னை சில்க்ஸ்ஸின் 7 மாடிக் கட்டடிடத்தில் தொடர்ந்து தீ எரிந்து வருவதால் கட்ட்டிடம் பலமிழந்து வருகிறது. ஆகையால் அங்கு அலங்காரத்துக்காக பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி சுவர்கள் உடைந்து சிதறி வருகிறது. மேலும் நெருப்பின் சூடு தாளாமல் கடையின் நான்காம் மாடியின் முன்பக்க சுவர் இடிந்துவிழுந்துள்ளது. மேலும் புகையை வெளியேற்ற பின்பக்க சுவரை தீயணைப்பு வீரர்கள் உடைத்தனர்.
10க்கும் மேறபட்ட தீயணைப்பு வண்டிகள், 150 வீரர்கள் தொடர்ந்து போராடியும் நெருப்பை அணைக்க முடியவில்லை. ராட்சத வண்டிகளைக் கொண்டு வந்து தண்ணீரை 7 ஆவது மாடியில் பீய்ச்சி அடித்தாலும் இப்போது வரை தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என தீயணைப்புத் துறை வீரர்கள் கூறியுள்ளனர். கட்டுக்கடங்காமல் வெளியேறும் புகையை கட்டுப்படுத்த முடியாமல் வீரர்கள் தடுமாறுகின்றனர்.
இந்த பெரிய தீ விபத்து, பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் நடபப்பதால், பொதுமக்களுக்கு எந்த ஊறும் நடந்துவிடக் கூடாது என அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் உதயகுமார் ஆகியோர் வந்து பார்வையிட்டனர்.
நேற்று காலையிலிருந்து தீ எரிந்து வருவதால், பாதிக் கட்டடம் இடிந்து விழுந்துவிட்டது. மேலும் நெருப்பை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பதால், சென்னை சில்க்ஸின் மொத்த கட்டிடத்தையும் இடிப்பது என மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.