செல்வாக்கை பயன்படுத்தி சீட் வாங்காமல் 'ஜெயித்த' ப.சிதம்பரம், ஜி.கே.வாசன்
சென்னை: தேர்தலில் தலைமயிடம் தங்களுக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி சீட் வாங்குவதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்காக நம்மூர் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசனும் ப.சிதம்பரமும் செல்வாக்கை பயன்படுத்தி 'ஜெயித்திருக்கிறார்கள்' என்பதுதான் சுவாரசியம்.
லோக்சபா தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிட தயக்கம் காட்டி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர்சிங் தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.. பிரசாரம் செய்வேன் என்கிறார். உத்தர்காண்ட் மாநிலத்தில் சக்தி வாய்ந்த காங்கிரஸ் தலைவர் சத்பால் மகாராஜா பாஜகவுக்கு தாவிட்டார். அம்மாநிலத்தில் மேலும் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸுக்கு தாவுகின்றனர்.
இப்படி மாநிலத்துக்கு மாநிலம் போட்டியிடாமல் எப்படியெல்லாம் பம்முவது என்று ப்ளான் போட்டு காங்கிரஸ் தலைவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நம் தமிழகத்து காங்கிரஸ் தலைவர்கள்.. அதுவும் ஒரு கட்சியும் சீண்டாமல் தனித்துவிடப்பட்ட நிலையில் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவிடுவார்களா என்ன?
டெபாசிட்டே கிடைக்காது..
தமிழகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை, மாநில உரிமைகள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மீது பல கட்சிகளும் படுபயங்கர கோபத்தில் இருப்பதாலேயே தனித்து தெருவில் விடப்பட்டு இருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது என்ற நிலை உறுதி என்பது காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஜகா வாங்கிய ஜிகே வாசன்
இதனால் காங்கிரஸ் மேலிடம் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பே, தாம் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று ஜகா வாங்கிவிட்டார் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன். இதுவரை அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதே இல்லை. எல்லாமே கொல்லைப்புற ராஜ்யசபா எம்.பி.தான்.
தங்கபாலு எஸ்கேப்
சேலத்தில் எப்படியும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் தி கிரேட் எஸ்கேப் என்று அறிக்கையே விட்டு அமர்க்களப்படுத்தினார்.
கார்த்தி சிதம்பரம்
இந்த நிலையில் நேற்று வெளியான காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 30 பேரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதில் சீனியர் தலைவரும் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் பெயர் மிஸ்ஸிங்.. ஆனால் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்தது.
6 சிட்டிங் எம்.பிக்கள்..
இந்தப் பட்டியலில் கே.எஸ். அழகிரி (கடலூர்) , ஆரூண் (தேனி) , விஸ்வநாதன்( காஞ்சிபுரம்), என்.எஸ்.வி. சித்தன் (திண்டுக்கல்), ராமசுப்பு (நெல்லை), மாணிக்க தாகூர் (விருதுநகர்) ஆகிய 6 சிட்டிங் லோக்சபா எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் மணிசங்கர் அய்யர் இம்முறை மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார்.
வாசன், தங்கபாலு, ப.சிதம்பரம்
எதிர்பார்த்தபடியே ஜி.கே.வாசன், தங்கபாலு, ப.சிதம்பரம் போன்ற பெருந்தலைகள் பெயர் வேட்பாளர் பட்டியலில் இல்லை. இந்த மூவரும் தங்களது டெல்லி மேலிட செல்வாக்கை பயன்படுத்தி எப்படியும் தங்களது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுவிடாமல் பார்த்துக் கொண்டது அரசியலில் விசித்திரமாகத்தான் இருக்க முடியும்!