மோடி அரசுக்கு உலகம் சுற்றத் தெரியும்... ஆனால் பொருளாதாரத்தை நிர்வகிக்க தெரியாது.. ப.சி. விளாசல்
மோடிக்கு உலகம் சுற்றத் தெரியும், ஆனால் பொருளாதாரத்தை நிர்வகிக்கத் தெரியாது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: மோடி அரசுக்கு உலகம் சுற்றத் தெரியும், ஆனால் பொருளாதாரத்தை நிர்வகிக்கத் தெரியாது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
அண்மையில் மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து காங்கிரஸ் சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், 4 ஆண்டுகள் ஆட்சி செய்து விட்டு, 5-ஆவது ஆண்டில் மோடி அரசு அடி எடுத்து வைக்கிறது. எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது, மக்களுடைய தேவை என்ன?, மக்களுடைய கவலை என்ன?
மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்துதான் ஒரு நிதியமைச்சர் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஒரு ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கல்வி, சுகாதாரத் துறை, வேலைவாய்ப்புகள், விவசாயிகள் துன்பம் ஆகிய 3 சவால்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
பணத்தை டெபாசிட்
4 ஆண்டுகளில் செய்ய முடியாததை இந்த ஓராண்டிலா செய்ய போகிறீர்கள். 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து 31 சதவீத வாக்காளர்கள் ஏமார்ந்தார்கள். மோடி அரசு பதவியேற்றதும் நாட்டில் உள்ள ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று கூறினார்கள். செய்தார்களா, ஒரு வேளை இன்று சனிக்கிழமை (பிப் 10), பணத்தை டெபாசிட் செய்ய முடியாது, இதனால் திங்கள்கிழமை ஏற்றினாலும் ஏற்றுவார்கள். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்கள். சம்பா பருவம் முடிந்து குறுவை சாகுபடி ஆரம்பிக்க இன்னும் 7, 8 மாதங்கள் உள்ளன. அப்போது விவசாயிகளுக்கு செய்து என்ன பயன்?
2 கோடி வேலைவாய்ப்பு
4 ஆண்டுகால ஆட்சியில் 4 சம்பா, 4 குருவை முடிந்து விட்டது. 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு கொடுக்காத விலையை தற்போதுதான் தர போகிறார்களா. விவசாயத்தை நம்பியுள்ள 60 சதவீத மக்களுக்கு நம் அரசு என்ன செய்தது? ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 5000 போடுவேன் என்று மோடி சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டீர்கள். ஆனால் ரூ. 15 லட்சம் போடுவேன் என்று அவர் சொன்னதால் அவரை நம்பி வாக்களித்தீர்கள். ஆண்டுக்கு லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்கமாட்டீர்கள். ஆனால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று மோடி சொன்னதும் வாக்கை அவருக்கு போட்டுவிட்டீர்கள். அய்யோ இன்னும் இரு குழந்தைகளை பெற்றிருக்கலாமே என நினைத்தீர்கள். இதுதான் மிக பெரிய பொய்யை சொன்னால் உடனடியாக நம்புவது என்பது.
செஸ் வரி அதிகரிப்பு
வருமானத்தில் ஈட்டும் பணத்தை சேமிக்க வங்கியில் செலுத்தினால் 4 சதவீதம் வரி என்கிறார்கள். சரி வீட்டிலேயே சேமிக்கலாம் என்று 500 ரூ, 1000 ரூ வைத்திருந்தால் திடீரென நோட்டு செல்லாது என்கிறார்கள். தனி மனிதனுக்கு எந்த வரி சலுகையும் கிடையாது. இந்த பட்ஜெட்டில் வரி செலுத்தும் மக்களுக்கென்று எந்த ஒரு சலுகையும் இல்லை. நிரந்தர கழிவு ரூ. 40000 வரை வருமானத்தில் இருந்து கழிக்கலாம் என்று கூறியுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வழக்கத்தை மீண்டும் கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் இந்த நாட்டு மக்களுக்கு ரூ. 8000 கோடி சலுகை தருகிறார்கள். 3 சதவீதம் செஸ் வரியை 4 சதவீதமாக அதிகரித்துள்ளனர். நீண்ட கால முதலீட்டில் வரி இருந்தால் அதில் 10 சதவீதம் வரி விதிக்கிறார்கள்.
2 பேருக்குதான் வேலை கிடைக்கிறது
இந்த புதிய வரி மூலம் நடுத்தர மக்களுக்கு ரூ. 31000 கோடி இழப்பு ஆகும். ரூ.8000 கோடி வரி சலுகை என்று அறிவித்துவிட்டு செஸ் வரி மூலம் ரூ. 31000 கோடியை அரசு வரியாக பெற்றுக் கொள்கிறது. இதில் யாருக்கு லாபம்? மக்களுக்கா, இல்லை அரசுக்கா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும் 100 பேரில் 2 பேருக்கு வேலை கிடைக்கிறதால் இளைஞர்கள் பதிவு செய்வதையே விட்டுவிட்டார்கள். இளைஞர்கள் சார்பில் வேலைவாய்ப்பு தருவதாக சொன்னீர்களே அது எங்கே என மோடி அரசிடம் கேட்டால் பக்கோடா விற்பதும் வேலைவாய்ப்பு என்கிறார்கள். பக்கோடா காதருக்கு பதிலாக பக்கோடா பிரதமர் வந்துவிட்டார்.
இந்திய பொருளாதாரம்
பொருளாதாரத்தை நிர்வகிக்கத் தெரியாத அரசு இந்த அரசு. ஆனால் உலகம் சுற்றும் வாலிபனாக இருக்க தெரியும். வெளிநாட்டுத் தலைவர்களை கட்டி அணைக்க தெரியும். ஆனால் இந்திய பொருளாதாரத்தை நடத்த தெரியாது. நல்லவேளையாக இது 5-ஆவது பட்ஜெட், இனி ஒரு பட்ஜெட் கிடையாது என்ற நிம்மதியுடன் இந்திய மக்கள் இருப்பர் என்றார் ப.சிதம்பரம்.