சிலரின் தவறால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.. வேதனை அடைந்துள்ளேன்.. மனம் திறந்த எடப்பாடியார்!
சிலர் செய்த தவறால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: சிலர் செய்த தவறால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்துள்ளதாகவும் அவர் மனம் திறந்துள்ளார்.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில் பென்டிரைவ்கள், லேப்டாப்கள், ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை கோவிலாக பார்க்கும் அதிமுகவினர் இடையே இந்த சோதனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து தினகரன் ஆதரவாளர்கள் பல இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சசியும் தினகரனும்தான் காரணம்
போயஸ் கார்டனில் ரெய்டு நடத்தப்பட்டதற்கு சசிகலாவும் தினகரனும்தான் காரணம் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி குற்றம்சாட்டினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் சசிகலா குடும்பத்தினர் போயஸ் கார்டனில் தங்கியிருந்தது தான் ரெய்டுக்கு காரணம் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மனம் திறந்த முதல்வர்
போயஸ்கார்டனில் ரெய்டு நடத்தப்பட்டதற்கு சசிகலா குடும்பத்தினர்தான் காரணம் என ஈபிஎஸ் ஓபிஎஸ் அணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எதற்காக போயஸ் கார்டனில் ரெய்டு நடத்தப்பட்டது என்பது உங்களுக்கே தெரியும் என்றார். சிலர் செய்த தவறால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மனவேதனை அடைந்துள்ளேன்
இதனால் தான் மனவேதனை அடைந்திருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். வருமான வரி சோதனைக்கும் மாநில அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். வரி ஏய்ப்பு செய்தவர்களாலேயே ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் ரெய்டு நடைபெற்றது.
கோவிலாக பார்த்த ஜெ. வீடு
இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றார். தாங்கள் கோயிலாக பார்த்த ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் சோதனை நடந்திருப்பது வேதனையை தருகிறது. ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.