காலம் போன காலத்தில் நதிகள் இணைப்பு பற்றி பேசுகின்றனர்.. ரஜினியை போட்டுத் தாக்கிய எடப்பாடியார்
காலம் போன காலத்தில் நதிகள் இணைப்பு பற்றி பேசுகின்றனர் என நடிகர் ரஜினிகாந்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளாசியுள்ளார்.
Recommended Video

கோவில்பட்டி: காலம் போன காலத்தில் நதிகள் இணைப்பு பற்றி பேசுகின்றனர் என நடிகர் ரஜினிகாந்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளாசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற பைப்லைன் திட்ட குடிநீர் விநியோக தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உணவு தானிய உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் பெறுகிறது. இதனை பாராட்டி மத்திய அரசு தமிழகத்திற்கு கிரிஷ்ஹரிமா எனும் முதல் பரிசிற்கான விருதை வழங்கியது. தமிழகத்தில் விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது.

கல்வியில் சிறந்த மாநிலம்
கல்வியிலும் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கடந்த ஆண்டு 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே 46.34 சதவீதம் வரை உயர்கல்வி படிப்பிற்கான எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகரித்துள்ளது.

ஒரு லட்சம் இருசக்கர வாகனம்
வேலைக்கு செல்லும் பெண்கள், அமைப்புசாரா பெண்களுக்கு ஆண்டுதோறும் மானிய விலையில் ஒரு லட்சம் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அரசு தொடங்கியது. இதற்காக 3 லட்சத்து 34 ஆயிரம் பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

தமிழகம் முதலிடம்
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுகின்றன. மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் கடந்த 3 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறது.

என்ன செய்தார்கள்?
இன்றைக்கு பல பேர் புதிது புதிதாக கட்சி துவங்குகிறார்கள். புதிய கட்சிகள் துவங்குவது குறித்து வேறுபட்ட கருத்து எங்களுக்கு கிடையாது. ஆனால் இதுநாள் வரை என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை.

காலம் போன காலத்தில்
இன்று காலம்போன காலத்தில் நதிகளை எல்லாம் இணைக்க வேண்டும் என்று சொல்கிறார். ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி அதுமுடியும் தருவாயில் இப்போது புதிது, புதிதாக பல தலைவர்கள் முளைத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

நதிகள் இணைப்பு மகிழ்ச்சி
அண்மையில் நடைபெற்ற காலா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தென்னிந்திய நதிகளை இணைப்பதே தனது லட்சியம் என்றார். நதிகளை இணைத்துவிட்டு கண்ணைமூடினால் மகிழ்ச்சி என்றும் ரஜினி கூறியிருந்தார்.

முதல்வர் விமர்சனம்
ரஜினியின் பேச்சை அதிமுக அமைச்சர்கள் விமர்சித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு விழாவில் மறைமுகமாக விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications