‘நிதி’ வேண்டாம் ‘நீதி’ தான் வேண்டும்.. அமைச்சரிடம் கதறிய சின்னசேலம் மாணவியின் தாய்! கலங்கிய கணேசன்!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நிதியுதவி அளிக்கச் சென்ற அமைச்சர் கணேசனிடம், தனக்கு 'நிதி' வேண்டாம் 'நீதி' தான் வேண்டும் என மாணவியின் தாய் கதறியழுத காட்சிகள் காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
Recommended Video
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி இருந்தபடியே 12ம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில் மாணவி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்று அவரது பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.

மர்ம மரணம்
மாணவியின் பெற்றோர்களும் உறவினர்களும் பதறிப் துடித்தபடி பள்ளிக்கு விரைந்தனர். தகவல் அறிந்த போலீசார், பள்ளிக்குச் சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறும் நிலையில், போராட்டங்களும் வலுத்து வருகிறது.

மாணவி தற்கொலை
பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் மாணவி, 3வது மாடியில் இருந்து தானே கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகின்றனர். பெற்றோர் தரப்பில் மாணவி தற்கொலையில் ஈடுபட்டிருக்க மாட்டார் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது எனக் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். மாணவியின் உறவினர்கள் பள்ளியின் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நீண்ட நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்த பொதுமக்களை போலீசார் கலைத்தனர்.

அமைச்சர் நிதியுதவி
மாணவியின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி அளித்தார்.

தாயார் கோரிக்கை
அப்பொழுது மாணவியின் தாயார் தனக்கு நிதி வேண்டாம் நீதி தான் வேண்டும் என அமைச்சரிடம் கதறியழுபடி கூறினார். மேலும் தான் பட்ட படிப்பு படித்து உள்ளதாகவும் தனது அரசு வேலை கிடைத்திட உதவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார். அதற்கு அமைச்சர் உங்கள் கோரிக்கை அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்ததை அடுத்து நிதி உதவியைப் பெற்றுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications