பல ஆயிரம் பக்க தீர்ப்புகளைத் தாண்டி.. தூக்குக் கயிற்றிலிருந்து தப்பிய பேரறிவாளன், சாந்தன், முருகன்!
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிராசாரத்திற்கு வந்தபோது மனித வெடிகுண்டுக்குப் பலியானார். 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி நடந்த இந்த கொடிய சம்பவத்தில் கைதான பலருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் முருகன், சாந்தன், பேரறிவாளனைத் தவிர அத்தனை பேருக்கும் உச்சநீதிமன்றத்தில் தண்டனை குறைக்கப்பட்டது.
தற்போது மிக நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் இந்த மூவரும் தூக்குக் கயிற்றிலிருந்து தப்பியுள்ளனர்.
91ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இந்த மூவரும் சந்தித்த சட்ட போராட்டங்கள், மக்கள் ஆதரவுப் போராட்டங்கள்., ஆதரவுக் குரல்கள்.. மிகப் பெரியவை..
அது பற்றிய ஒரு பார்வை...
மனித வெடிகுண்டு
தனு என்ற மனித வெடிகுண்டு மூலம் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி இரவு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
மனித வெடிகுண்டு பெண் தனு
கொலை நடந்த அடுத்த நாள் தடவியல் நிபுணரான பேராசிரியர் சந்திரசேகரன், மனித வெடிகுண்டாக வந்தது ஒரு பெண் என்பதைக் கண்டுபிடித்துக் கூறினார். தனது இடுப்பில் அவர் பெல்ட்டில் குண்டைப் பொருத்தியிருந்ததாகவும் அவர் கூறினார். மேலும், அவரது பெல்ட்டில், ஆர்டிஎக்ஸ் பொருத்தப்பட்டிருந்ததாகவும், பெரும் சேதத்தை உருவாக்குவதற்காக ஆயிரக்கணக்கான 2 மில்லிமீட்டர் இரும்புத் துகள்கள் அதில் இணைக்கப்பட்டிருந்தாகவும் அவர் கூறினார்.
ராஜீவுடன் சேர்ந்து உயிரிழந்த 17 பேர்
இந்த கொடும் சம்பவத்தில் ராஜீவ் காந்தி தவிர மேலும் 17 பேரும் உயிரிழந்தனர். தனுவின் தலை துண்டிக்கப்பட்டு தனியாக கிடந்தது.
ஹரிபாபுவின் புகைப்படங்கள்
இந்த சம்பவத்தில் புகைப்படக்காரர் ஹரிபாபு என்வரும் உயிரிழந்தார். ஆனால் தனு, சிவராசன், சுபா உள்ளிட்டவர்களை இவர் கடைசி நேரத்தில் எடுத்த புகைப்படம்தான் இந்த வழக்கில் மிக முக்கிய சாட்சியமாக மாறியிருந்தது.
உயிரிழந்த 15 பேர்
ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி பி.கே.குப்தா, லதா கண்ணன், கோகிலவாணி, எஸ்.பி இக்பால், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்ட் ஜோசப், சப் இன்ஸ்பெக்டர் எத்திராஜ், எட்டுக்கள் சுந்தரராஜு பிள்ளை, ரவி, போலீஸார் தர்மன், சந்திரா, சாந்தி பேகம், டேரில் பீட்டர், குமாரி சரோஜா தேவி, முனுசாமி.
விசாரணைக்கு வந்த கார்த்திகேயன்
மே 24ம் தேதி இந்த வழக்கை அப்போது சிபிஐ மூத்த அதிகாரியாக இருந்த கார்த்திகேயன் வசம் ஒப்படைத்தது மத்திய அரசு. கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு புலனாய்வுப் படை அமைக்கப்பட்டது. வழக்கை விசாரிக்க நீதிபதி எஸ்.எம்.சித்திக் தலைமையில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
வர்மா கமிஷன்
மே 27ம் தேதி நீதிபதி ஜே.எஸ். வர்மா கமிஷன் விசாரணைக்காக அமைக்கப்பட்டது.
இருவர் கைது
ஜூன் 11ம் தேதி பாக்யநாதன், பத்மா ஆகிய இருவர் இந்த வழக்கில் முதல் முறையாக கைது செய்யப்பட்டனர்.
நளினி கைது
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நளினி ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருடைய கணவர் முருகனும் கைது செய்யப்பட்டார். அப்போது நளினி கர்ப்பமாக இருந்தார்.
டேங்கர் லாரியில் தப்பிய சிவராசன் - சுபா
ஜூன் 28ம் தேதி சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஒரு காலி டேங்கர் லாரியில் சிவராசனும், சுபாவும் தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகின.
பெங்களூரில் சிவராசன்- சுபா தற்கொலை
ஆகஸ்ட் 20ம் தேதி பெங்களூரில் வைத்து சிவராசன், சுபா, மேலும் ஐவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். இவர்களையும் சேர்த்து இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேர் உயிரிழந்தனர்.
ஜெயின் கமிஷன் நியமனம்
ஆகஸ்ட் 23ம் தேதி நீதிபதி எம்.சி. ஜெயின் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.
ரங்கன் கைது
ஆகஸ்ட் 29ம் தேதி ரங்கன் என்ற குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்ய்பட்டார்.
1992, மே 20ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல்
1992ம் ஆண்டு மே 20ம் தேதி தடா கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுப் படை தனது குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது. 449 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், 41 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதில் 26 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். முதல் குற்றவாளியாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பெயரும், அடுத்து பொட்டு அம்மான் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. 3வது குற்றவாளியாக அகிலா என்கிற அகிலாக்காவின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.
வர்மா கமிஷன் அறிக்கை தாக்கல்
1992ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி வர்மா கமிஷன் தனது அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சரிடம் தாக்கல் செய்தது.
பூந்தமல்லி கோர்ட்டில் விசாரணை தொடக்கம்
1993ம் ஆண்டு மே 5ம் தேதி பூந்தமல்லியில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை தொடங்கியது. எஸ்ஐடி சார்பில் வழக்கறிஞர் பி.ராஜமாணிக்கம் ஆஜரானார். விசாரணையின்போது பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். உயிரிழந்த 12 பேர் இறந்த குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் உயிரோடு இருந்த 26 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
26 பேர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு
1993ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி விசாரணைக்குட்படுத்தப்பட்ட 26 பேர் மீதும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. இவர்கள் - நளினி, சாந்தன், முருகன், சங்கர், விஜயநந்தன், சிவரூபன், கனகசபாபதி, ஆதிரை, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தி, விஜயன், செல்வலட்சுமி, பாஸ்கரன், சண்முகவடிவேலு என்கிற தம்பி அண்ணா, பி.ரவிச்சந்திரன், சுசீந்திரன், பேரறிவாளன், இரும்பொறை, பாக்கியநாதன், பத்மா, தனசேகரன், ராஜசூரியா என்கிற ரங்கன், விக்னேஸ்வரன் என்கிற விக்கி, ரங்கநாத்.
1044 அரசு சாட்சிகள்
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 1044 சாட்சிகள் சேர்க்கப்பட்டன. 1477 விசாரணை ஆவணங்கள் இணைக்கப்பட்டன. 10,000 பக்கங்களில் இவை இடம் பெற்றிருந்தன. எதி்த் தரப்பில் 74 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
பிரபாகரனை நாடு கடத்தக் கோரிக்கை
1994ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்புமாறு இலங்கைக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்தது.
புதிய நீதிபதியாக நவநீதம் நியமனம்
இந்த வழக்கில் 1996ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி புதிய நீதிபதியாக நவநீதம் நியமிக்கப்பட்டார்.
288 சாட்சிகள் விசாரணை
1997ம் ஆண்டு மே 5ம் தேதி 288 அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.
குற்றவாளிகளிடம் விசாரணை
1997ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை தொடங்கியது.
1997ல் முடிந்தது அரசுத் தரப்பு வாதம்
1997ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி அரசுத் தரப்பு தனது வாதத்தை முடித்தது. இதே ஆண்டில் ஜெயின் கமிஷன் தனது 17 பகுதிகளைக் கொண்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
எதிர்த்தரப்பு வாதம் முடிந்தது
ஆகஸ்ட் 14ம் தேதி எதிர்த் தரப்பு வாதம் தொடங்கி நவம்பர் 5ம் தேதி முடிவடைந்தது.
26 பேருக்கும் மரண தண்டனை
1998ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி நீதிபதி நவநீதம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பை அறிவித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் அவர் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 1600 பக்கங்களில் தீர்ப்பு இடம் பெற்றிருந்தது.
ஜெயின் கமிஷன் இறுதி அறிக்கை
1998ம் ஆண்டு மே 7ம் தேதி ஜெயின் கமிஷன் தனது 2000 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.
26 பேரின் மரண தண்டனையும் நிறுத்தி வைப்பு
1998ம் ஆண்டு மே 27ம் தேதி பூந்தமல்லி தடா கோர்ட் மரண தண்டனை அளித்த 26 பேருக்கும் மறு உத்தரவு வரும் வரை தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
19 பேர் விடுதலை
இதையடுத்து இந்த 26 பேர் சார்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.டி.தாமஸ், வாத்வா, குவாத்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்து 1999ம் ஆண்டு மே 11ம் தேதி உத்தரவிட்டது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது தண்னையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. மற்ற 19 பேரையும் விடுதலை செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ராஜீவ் கொலைக்குப் பொறுப்பேற்ற விடுதலைப் புலிகள்
2006ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி முதல் முறையாக ராஜீவ் காந்தி படுகொலைக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்தது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் கருணை மனுக்கள் நிராகரிப்பு
2011ம் ஆண்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை நிராகரிப்பதாக அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அறிவித்தார். இவர்கள் மூவரும் கருணை மனுக்களைத் தாக்கல் செய்து 11 ஆண்டுகள் கழித்து கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மூவரின் தூக்கை நிறுத்திய சென்னை உயர்நீதிமன்றம்
2011ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு முன்பாக தமிழகம் முழுவதும் உணர்ச்சிப் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியிருந்தன. தீர்ப்பை அறிய உயர்நீதிமன்றத்திலும் ஆயிரக்கணக்கானோர் கூடினர். மூவருக்காக ராம்ஜேத்மலானி ஆஜரானார்.
உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம்
இதையடுத்து உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது சட்டப் போராட்டம். அங்கு மூவரின் தண்டனையைக் குறைக்கக் கோரி மூவர் சார்பாகவும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஏற்பாட்டின் பேரில் ராம்ஜேத்மலானி வாதாடினார்.
இந்த வழக்கில்தான் தற்போது மூன்று பேரின் தூக்குத் தண்டனையும் ரத்தாகி, மூவரும் உயிர் தப்பியுள்ளனர்.
இத்தனைத் தடைளைத் தாண்டி..!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடைசி மூன்று பேரும் தூக்கிலிருந்து தப்பியுள்ளது தமிழ் ஆர்வலர்களை பெரும் நிம்மதிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் இந்த மூன்று பேரும், நீதிபதி நவநீதத்தின் 1600 பக்க தீர்ப்பு, ஜெயின் கமிஷனின் 5280 பக்க இடைக்கால அரிக்கை, ஜெயின் கமிஷனின் 2000 பக்க இறுதி அறிக்கை, கொலை வழக்கு விசாரணையின் 9000 பக்க ஆவணங்கள், உச்சநீதிமன்ற நீதிபதி வாத்வாவின் 201 பக்க தீர்ப்பு, நீதிபதி கே.டி.தாமஸின் 69 பக்க தீர்ப்பு, நீதிபதி குவாத்ரியின் 25 பக்க தீர்ப்பு, கருணை மனுக்கள் நிராகரிப்பு .. என பல தடைகளைத் தாண்டி உயிர் தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.