ஏற்காட்டில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல்: அமைச்சர் வளர்மதி உள்பட 50 அதிமுகவினர் மீது வழக்கு
இடைத்தேர்தலையொட்டி ஏற்காடு தொகுதிக்குட்பட்ட தும்பலில் நேற்று பிரச்சாரம் நடந்தது. அப்போது திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலின்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி அதிமுக கிளை செயலாளர் திருவாக்கவுண்டர் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் திமுகவைச் சேர்ந்த 14 பேர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது பற்றி திமுக ஊராட்சி மன்ற தலைவர் கணேசனின் டிரைவர் முருகன் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் அதிமுகவை சேர்ந்த தும்பல் கலியமூர்த்தி, குட்டி என்கிற திருவாக்கவுண்டர், சைதாப்பேட்டை செந்தமிழன் எம்.எல்.ஏ., சென்னை அசோக் எம்.எல்.ஏ. தும்பல் முருகன் உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.