வடபழனி தீ விபத்து - பலியான 4 பேர் குடும்பத்தினருக்கு தலா. ரூ. 1லட்சம் நிவாரணம்
வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த நால்வருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நிதியமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களில் நான்கு பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வடபழனி முருகன் கோவில் தெற்கு பெருமாள் கோவில் தெருவில், நிதி நிறுவன அதிபர் விஜயகுமாருக்கு சொந்தமான நான்கு தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இன்று அதிகாலையில் குடியிருப்பு வளாகத்தில் வாகன நிறுத்தம் அமைந்துள்ள இடத்தில் உள்ள மின்சார பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த மின்கசிவு காரணமாக, அடுத்தடுத்து நிறுத்தப்பட்ட 20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு வேகமாக தீ பரவி, கொழுந்து விட்டு எரிந்ததில் குடியிருப்பு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் சிக்கி, கீழ்தளத்தில் குடியிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மீனாட்சி, செல்வி, சஞ்சய் மற்றும் சந்தியா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார். மேலும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க சென்னை மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும்; சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.