கொடநாடு போக முடிந்த முதல்வருக்கு ராமேஸ்வரம் போக முடியவில்லையா? கேட்கிறார் விஜயகாந்த்
ராமேஸ்வரம்: ஹெலிகாப்டரில் கொடநாடு சென்றிருக்கும் ஜெயலலிதா அதே ஹெலிகாப்டரில் அப்துல்கலாம் பிறந்த நாளான இன்று ராமேஸ்வரம் சென்று அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் 84வது பிறந்தநாள் நாடுமுழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் பேக்கரும்பு பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தே.மு.தி.க. சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை ராமேசுவரத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று காலை 6.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என்றார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹெலிகாப்டரில் கொடநாடு போக முடிகிறது. ஆனால் அவரால் ஹெலிகாப்டரில் அப்துல்கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்ல முடியவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை என்றார். ஹெலிகாப்டரில் கொடநாடு சென்றிருக்கும் ஜெயலலிதா அதே ஹெலிகாப்டரில் அப்துல்கலாம் பிறந்த நாளான இன்று ராமேஸ்வரம் சென்று அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கலாம் என்று கூறினார் விஜயகாந்த்.