தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் யார் யார்? இன்று தெரியும்.. பரபரப்பில் தலைமைச் செயலகம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள எம்.எல்.ஏக்களில் , டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் யார் யார் என்பது இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தெரியும் என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்த
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள எம்.எல்.ஏக்களில் உள்ள டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் யார் யார் என்பதை கண்டறியவே தலைமைச் செயலகத்தில், இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அ.இ.அ.தி.மு.க. , எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கிறது. மாவட்ட வாரியாக எம்.எல்.ஏக்களுடன் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் அஇஅதிமுவுக்கு சட்ட சபையில், 135 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. இதில், டிடிவி தினகரனுக்கு இப்போது 21 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த ஆதரவால் பெரும்பான்மை எண்ணிக்கையை ஆளும் அஇஅதிமுக அரசு இழந்து விட்டதாக திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.
இதனால் தனது தலைமையிலான அமைச்சரவைக்கு எத்தனை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்பதை அறிய கடந்த திங்கள்கிழமையன்று அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில், எம் எல் ஏக்கள் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் பழனிச்சாமி.
80 எம் எல் ஏக்கள் ஆதரவு?
இந்தக் கூட்டத்தில் சுமார் 80 எம்.எல்.ஏக்கள் வரை மட்டுமே பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மீண்டும் எம்.எல்.ஏக்களின் ஆதரவு எண்ணிக்கையைக் கணக்கிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார்.
அமைச்சர்களுக்கு கட்டளை
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வர வேண்டுமென ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அமைச்சர்கள் அந்த மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். அவர்களை, தொடர்பு கொண்டு பேசி அவர்களை முதல்வருடன் சந்திக்க வைப்பது சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணி என்கிறார்கள் அஇஅதிமுகவினர்.
தொலைபேசி மூலம் கட்டளை
அதன்படி, ஒவ்வொரு மாவட்ட அமைச்சர் தரப்பில் இருந்தும் சம்பந்தப்பட்ட மாவட்ட எம்.எல்.ஏ க்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. அதில் பல எம்.எல்.ஏக்கள் அதிருப்தி பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமைதி
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட்ட போது அவருக்கு 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்து வந்தனர். அணிகள் இணைந்த பிறகு, அந்த எம்.எல்.ஏக்களுக்கு எந்த அறிவுரைகளையும் ஓ.பன்னீர்செல்வம் வழங்குவதில்லை என்று தெரிகிறது.
முதல்வர் அழைப்பிற்கு காரணம் ?
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதல்வர் பழனிச்சாமி எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டு முதல்வரைச் சந்திக்கப் போகிறார்கள் என்பதே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஸ்லீப்பர் செல்கள்
இதன்மூலம், டிடிவி தினகரன் அடிக்கடி குறிப்பிடும் ஸ்லீப்பர் செல்கள் வெளியே தெரிவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், தனது அணியில், தினகரன் ஆதரவாளர்கள் இருப்பது குறித்து இன்று முதல்வர் தெளிவான முடிவுக்கு வருவார் என்றும் தலைமைச் செயலக வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.