பேரறிவாளன் பரோல் குறித்து பரிசீலனை.. பிடிகொடுக்காமல் பேசும் முதல்வர்!
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் பரோல் குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் பரோல் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட ஏழு பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
வேலூர் சிறையில் 25 ஆண்டுகளாக உள்ள பேரறிவாளனுக்கு உடல்நலக்கோளாறு காரணமாக அவ்வ போது சென்னை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் பேரறிவாளனின் தந்தை வயோதிகத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறிது காலம் தாய், தந்தையருடன் இருக்க பரோலில் விட வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஏற்கனவே இது குறித்து சிறைத்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில் மத்திய சட்டங்களின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் பரோலில் விட சிறைத்துறை மறுத்துவிட்டது. இதனையடுத்து அமைச்சர்கள், முதல்வரை சந்தித்து பேரறிவாளனின் பரோல் குறித்து அற்புதம்மாள் வலியுறுத்தினார். இந்நிலையில் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்டோர் பேரறிவாளன் பரோல் குறித்து ஏற்கனவே சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானங்களைக் கொடுத்து விவாதித்தன.
திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் பேரறிவாளன் பரோல் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் பேசினார். இந்நிலையில் சட்டசபையில் இன்று காவல் மானியக் கோரிக்கை மீது பேசிய முதல்வர் பழனிசாமி, பேரறிவாளன் பரோல் குறித்து அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும் என்று கூறியுள்ளார். மேலும் தலைமை வழக்கறிஞரை தொடர்பு கொண்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை பரோலில் விடுவது பற்றி ஆலோசனை பெறப்படும் என்றார்.