ஒரு ஊர்ல கழுதை இருந்துச்சாம்.. எருமை இருந்துச்சாம்.. “அம்மா” சொன்ன கதை!
திருச்சி: ஸ்ரீரங்கத்திற்கு நேற்று வந்த முதல்வர் ஜெயலலிதா வழக்கம் போல குட்டிக் கதை சொல்லி அனைவரையும் மகிழ்வித்தார்.
தனது தொகுதியான ஸ்ரீரங்கத்திற்கு நேற்று வருகை தந்தார் முதல்வர். அங்கு பல்வேறு நலத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில் வழக்கம் போல குட்டிக் கதை சொன்னார்.. முதல்வர் சொன்ன கதையின் முழு விவரம்...
முன்னொரு காலத்தில் மன்னர் …
முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்து வந்தார். ஒரு நாள் அவர் மனதில், "கடவுள் இருக்கும் இடத்திற்கும், நமக்கும் எவ்வளவு தூரம் இருக்கும்?" என்ற வினா எழுந்தது. உடனே அரச சபையை கூட்டி அனைவரிடமும் இதற்கான விடையை வினவினார் மன்னர். யாருக்கும் இதற்கான விடை தெரியவில்லை. இதற்கான விடையைத் தெரிந்து கொள்ள ஊருக்கு வெளியிலிருந்து ஒரு முனிவர் வரவழைக்கப்பட்டார்.
கடவுள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் தெரியுமா…
அந்த முனிவரிடம், "கடவுள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார் மன்னர். அதற்கு அந்த முனிவர், "கடவுள் கூப்பிடுகிற தூரத்தில் தான் இருக்கிறார்" என்று பதில் அளித்தார். "அப்படியானால், கடவுளை அழைத்தால் உடனே வந்து விடுவார் அல்லவா?" என்று கேட்டார் மன்னர்.
புரியும்படி கூறுங்கள்…
அதற்கு அந்த முனிவர், "எந்த இடத்தில் கடவுள் இருப்பதாக நீ நினைக்கிறாயோ அதைப் பொறுத்தது" என்றார். "புரியும்படி கூறுங்கள்" என்று அந்த மன்னர் கேட்டுக் கொண்டார். இதற்கு பதில் அளித்த முனிவர், "துரியோதனன் சபையில் திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது, "வைகுண்ட வாசா! காப்பாற்று" என்று கிருஷ்ணரை அழைத்தாள் திரௌபதி. ஆனால் கிருஷ்ணர் வரவில்லை. "துவராகை நாயகனே!" என்னை காப்பாற்று என்று அழைத்தாள் திரௌபதி. அப்போதும் கிருஷ்ணன் வரவில்லை. "இதயத்தில் இருப்பவனே!" என்று கடைசியாக அழைத்தாள் திரௌபதி. உடனே பகவான் கிருஷ்ணர் தோன்றி திரௌபதியின் மானத்தைக் காத்தார்.
நீங்கள் நினைப்பதற்கு தகுந்தவாறு…
கடவுள் எவ்வளவு தொலைவில் இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த நினைப்பிற்கு தகுந்தவாறு உடனே வந்து கடவுள் அருள் புரிவார். எந்த இடத்தில் இருந்தாலும் உங்களின் குரல் கடவுளுக்கு கேட்கும். உள்ளத்தில் கடவுள் இருப்பதாக நினைத்து அழைத்தால் உடனே வந்து அருள் பாலிப்பார்" என மன்னருக்கு விளக்கம் அளித்தார் அந்த முனிவர்.
கடவுளைப் போலத்தான் மக்களும்…
கடவுளைப் போலத் தான் மக்களும். அதனால்தான், "மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்றார் பேரறிஞர் அண்ணா. அப்படியானால், மக்களாகிய நீங்கள் தானே மகேசன்? மகேசனாகிய மக்கள் எப்போதும் என் இதயத்தில் இருக்கிறீர்கள். உங்கள் இதயங்களிலும் நான் என்றென்றும் குடிகொண்டு இருக்கிறேன். அதனால் தான், மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு அமோகமான வெற்றியை நீங்கள் அளித்தீர்கள். மூன்றாண்டு கால ஆட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளீர்கள். தமிழக மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க அயராது பாடுபடுவேன்.
பாடம் புகட்டிய மக்களுக்கு நன்றி…
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எவ்வித குறிக்கோளுமின்றி எனது அரசின் மீது புறஞ்சொல்லி திரிவதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு, உண்மைக்கு மாறான வகையில், நியாயமற்ற முறையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட எதிரணிகளுக்கு தக்கப் பாடம் புகட்டிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னொரு கதை …
குறை சொல்லி திரிபவர்கள் என்றவுடன் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. மன்னரிடம் பரிசு கேட்டு இரு புலவர்கள் சேர்ந்து வந்தனர். மன்னர் இருவரையும் தனித் தனியாக அழைத்துப் பேசினார்.
மக்கு.. எருமை…
முதல் புலவரிடம், "உங்களோடு வந்திருக்கும் புலவர் எப்படிப்பட்டவர்? என்று கேட்டார் மன்னர். அதற்கு முதல் புலவர், "அவர் ஒரு மக்கு. எருமை" என்று கூறினார். இதைக் கேட்ட மன்னர், "நன்றி புலவரே, நாளை காலை அரசவைக்கு வாருங்கள்" என்று கூறினார்.
மடையர்.. கழுதை…
பின்னர் இரண்டாவது புலவரை அழைத்து, "உங்களோடு வந்திருக்கும் புலவர் எப்படிப்பட்டவர்?" என்று மன்னர் கேட்டார். அதற்கு இரண்டாவது புலவர், "அவர் ஒரு மடையர், கழுதை" என்றார். இதைக் கேட்ட மன்னர், "நன்றி புலவரே. நாளை காலை அரச சபைக்கு வாருங்கள்" என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தார். மறுநாள் சபை கூடியது. இரு புலவர்களும் வந்து காத்திருந்தனர்.
எருமைக்குக் கொடுத்தார் கழுதைக்குக் கோபம் வருமே..
"புலவர்களே, உங்களில் ஒருவரை மற்றவர் எருமை என்றும், கழுதை என்றும் நீங்கள் சொன்னீர்கள். எருமைக்கு பரிசு கொடுத்தால் கழுதைக்கு கோபம் வரும். கழுதைக்குப் பரிசு கொடுத்தால் எருமைக்கு கோபம் வரும். நானோ மனிதர்களில் சிறந்த புலவர்களுக்குப் பரிசு தருபவன். இங்கே எருமைக்கும், கழுதைக்கும் வேலையில்லை" என்று கூறினார் மன்னர்.
மன்னர் போலவே உங்கள் தீர்ப்பும்…
இந்த மக்களவைத் தேர்தலில் நீங்கள் அளித்த தீர்ப்பு இந்த மன்னர் கூறிய தீர்ப்பு போல் அமைந்துள்ளது. அதாவது, கடமையைச் செய்பவர்களை, உரிமையைத் தட்டிக் கேட்பவர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்துள்ளீர்" என்று பேசினார் ஜெயலலிதா.
ஜெயலலிதா மக்கு, மடையர், எருமை, கழுதை என்று யாரைக் குறிப்பிட்டார் என்பது புரிகிறதா உங்களுக்கு...??