விவசாயிகளின் நூற்றாண்டு கனவு.. சிக்சர் அடிக்கும் முதல்வர் ஸ்டாலின்.. கனமழைக்கு இடையே பறந்த ஆர்டர்!
சென்னை: தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்ட சோதனை ஓட்டத்தை தற்போது மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த ஆணையை பிறப்பித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டிப் போட்ட கனமழை தற்போது தென் மாவட்டங்களில் ஆட்டத்தைக் காட்டி வருகிறது. நேற்று முதல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வருகிறது.

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் உபரிநீரை கொண்டு செல்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சருடனும் நீர்வளத்துறை அலுவலர்களுடனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்தாலோசித்தார்.
மழை விடவே விடாது.. மணிமுத்தாறு, மாஞ்சோலையில் நாளை உச்சத்தை எட்டும்.. வெதர்மேன் ஷாக் அப்டேட்!
இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு உபரிநீர் திறக்கப்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் வாழும் விவசாயிகளின் நூற்றாண்டு கனவான இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், வேளாண் பெருமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கடந்த 2006ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சி காலத்தில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு இந்த திட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் பணிகள் முடிந்துள்ள சூழலில், தற்போது வடகிழக்குப் பருவமழையால் தொடர் மழை பெய்து வரும் நிலையில், உபரி நீரை, இந்த சோதனை ஓட்டத்திற்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி விவசாயிகள் பயனடைய உள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த மார்ச் 2008-ல் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் அறிவித்தபடி, தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும். 13,758 மில்லியன் கண அடி வெள்ளநீரில், கண்ணடியண் (தாமிரபரணியின் 3-வது) அணைக்கட்டில் இருந்து 2765 மில்லியன் கன அடி நீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்தை நான்கு நிலைகளாக செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் 21.02.2009 அன்று இத்திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
தற்போது, முதல் மூன்று நிலைகளுக்கான பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு நான்காவது நிலை பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. திருநெல்வேலி. மாவட்டத்தில் 67.1 கி.மி நீளத்திற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8.10 கி.மீ நீளத்திற்கும், ஆக மொத்தம் 75.2 கி.மீட்டர் நீளத்திற்கு வெள்ளநீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தினால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் (56933 ஏக்கர்) பாசன உறுதி பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளும் பயன்பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்களும் பயன் பெறும்.

தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இத்திட்டத்தில் உபரிநரை கொண்டு செல்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சர் அவர்களிடமும் நீர்வளத்துறை அலுவலர்களுடனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசித்தார்.
இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்ட மேற்கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டார். இவ்வாறு உபரிநீர் திறக்கப்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் வாழும் விவசாயிகளின் நூற்றாண்டு கனவான இத்திட்டம்செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், வேளாண் பெருமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications