காவிரி இல்லாத விவசாயி நிலை இதுதான்... பாடை கட்டி கோவை திமுக நூதன போராட்டம்!
கோவை சிங்காநல்லூரில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுகவினர் பாடை கட்டி, சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் 4வது நாளாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கோவையில் திமுகவினர் பாடை கட்டி, சங்கு ஊதி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத் தரும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட திமுகவினர் பாடை கட்டி நூதன முறையில் பேரணியாக வந்தனர்.
மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சித்து விட்டதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால் தமிழக விவாயிகள் நிலை என்ன என்பதை உணர்த்தும் விதமாகவும் கோவையில் திமுகவினர் பாடை கட்டி ஊர்வலம் மேற்கொண்டனர். விவசாயியின் உருவபொம்மையை குளிப்பாட்டி, பச்சை ஓலையில் பாடை கட்டி அதில் படுக்கவைத்து, இறுதிச் சடங்கிற்கு சங்கு ஊதிக்கொண்டு எடுத்துச் செல்வது போல திமுகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெற்றியில் பட்டை நாமத்துடன் தமிழக விவசாயிகளின் அவல நிலையை விளக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தின் போது பெண்கள் ஒப்பாரி வைத்து நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகள் பதவிவிலக வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.