கோவை: கேஸ் சிலிண்டர் வெடித்து குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகியது
கோவை அருகேயுள்ள பேரூர் சுண்டக்காமுத்தூர் பெரியப்ப செட்டியார் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). இவரது மனைவி ருக்குமணி (35). இவர்களுக்கு பாலாஜி (11)என்ற மகனும், ஷாலினி (8) என்ற மகளும் உள்ளனர்.
இன்று காலை ருக்குமணி சமையல் செய்வதற்காக கேஸ் சிலிண்டர் அடுப்பை பற்ற வைத்தார். அதில் அடைப்பு இருந்ததால் எரியவில்லை.
இதுகுறித்து பிள்ளையார் செட்டிவீதியை சேர்ந்த உறவினர் ரங்கராஜ் (45) என்பவருக்கு சிவக்குமார் தகவல் தெரிவித்தார். தகவலறிந்ததும் ரங்கராஜ் கேஸ் சிலிண்டர் அடுப்பை சுத்தம் செய்யும் கருவிகளுடன் சிவக்குமார் வீட்டுக்கு வந்தார். அங்கு அடைப்பு ஏற்பட்டிருந்த கேஸ் சிலிண்டரை சரி செய்து கொண்டு இருந்தார்.
காலை 9 மணியளவில் குழந்தைகளுக்கு உணவு தயார் செய்ய ருக்குமணி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்து பம்ப் செய்தார். அருகில் கேஸ் சிலிண்டரை திறந்து ஸ்டவ்வை ரங்கராஜ் சரிசெய்து கொண்டு இருந்தார்.
மண்ணெண்னை ஸ்டவ்வில் பற்றிய தீ அருகில் இருந்த சிலிண்டரில் பரவியது. இதை பார்த்து ருக்குமணியும், ரங்கராஜூம் அதிர்ச்சியடைந்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து வீட்டின் மேற்கூரையை உடைத்துக் கொண்டு மேல் நோக்கி பல மீட்டர்கள் சென்று சிதறி மீண்டும் வீட்டிற்குள் விழுந்தது. இதில் சிவக்குமாரின் வீடு மளமளவென தீப்பிடித்து எரிந்தது.
இந்த தீ விபத்தில் வீட்டுக்குள் இருந்த சிவக்குமார், அவரது மனைவி ருக்குமணி, குழந்தைகள் பாலாஜி, ஷாலினி மற்றும் ஸ்டவ் அடுப்பை சரிசெய்ய வந்த ரங்கராஜ் ஆகிய 5 பேரும் சிக்கிக் கொண்டனர். அனைவரும் தீயின் சூடு தாங்காமல் கத்தி, கதறினர்.
பயங்கர சத்தம் கேட்டதால் அந்த பகுதி மக்கள் வந்து பார்த்தனர். அங்கு சிவக்குமாரின் வீடு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பேரூர் போலீஸ் நிலையத்துக்கும், கோவை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் அணைக்கப்பட்டு தனியாக ஸ்டவ்வில் இருந்து கழற்றி பாதுகாப்பாக வெட்டவெளிக்கு கொண்டு வந்து வைத்தனர். சிவக்குமாரின் வீடு உள்ள பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதற்குள் தகவலறிந்து தீயணைப்பு படைவீரர்கள் சிவக்குமாரின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சிவக்குமார், ரகுபதி உள்பட 5 பேரும் தீயில் கருகி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு 5 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகிறார்கள். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.