பாசம் மட்டுமில்ல கோபமும் வரும்... நிரந்தர தீர்வு வரும் வரை போராடுவோம் - இது கோவை புரட்சி
கோவை: தமிழர் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு மீட்பு உரிமை புரட்சி கோவையை குலுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. கோவை வ.உ.சி. மைதானத்தில் 5வது நாளாக இன்றும் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி தன்னெழுச்சியாக உருவான மாணவர் போராட்டம் தமிழகமெங்கும் தீவிரமடைந்து வருகிறது. கோவை வ.உ.சி மைதானத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொளுத்தும் வெயில், கொட்டும் பனி பொருட்படுத்தாமல் இரவு பகலாக, போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
4வது நாளாக நேற்றும் விடிய விடிய போராட்டம் நடத்தினர். 5வது நாளாக இன்றும் இளைஞர்கள், மாணவ, மாணவிகள், குழஙந் இந்த போராட்டத்தில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் குடும்பம் குடும்பாக பங்கெடுத்து, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
5வது நாளாக போராட்டம்
பாசத்திற்கும் நேசத்திற்கும் பேர் பெற்ற கோவை மண்ணின் மைந்தர்கள் வ.உ.சி. மைதானத்திலும், கொடீசியா மைதானத்திலும் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பகலில் கொளுத்தும் வெயிலையும், இரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அசராமல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டு வருகின்றனர்.
அமைதி போராட்டம்
கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்ற மாணவ, மாணவிகள் ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரி முழக்கமிட்டு வருகின்றனர். ஏராளமான மாணவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எழுச்சிமிக்க போராட்டம்
பெண்கள், குழந்தைகள், சிறுவர், சிறுமிகளும் வ.உ.சி. மைதானத்திற்கு வந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். குடும்பம் குடும்பமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டு வருகின்றனர். கோவை வ.உ.சி. மைதானத்தில் ஜல்லிக்கட்டு புரட்சியாளர்கள் லட்சக்கணக்கில் ஒன்று திரண்டு எழுச்சிமிக்க போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
அடிப்படை வசதிகள்
போராட்டத்தில் பங்கேற்க வருபவர்களுக்கு சுகாதாரமான உணவு, குடிநீர் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளை செய்துள்ளனர். ஒரு குப்பையை கூட கீழே போட விடாமல் சேகரித்து எடுத்துச் சென்று சுற்றுப்புறத்தை தூய்மையான பேணுகின்றனர்.
நிரந்தர தீர்வு
எங்களுக்கு ஜல்லிக்கட்டு நடக்கணும், அவசரம் அவசரமாக நடத்த கூடாது. நிரந்தரமாக சட்டம் போட்டு வருஷா வருஷம் நடத்தணும் என்பது கோவை மக்களின் கோரிக்கையாக உள்ளது. நாங்க பாசமாவும் இருப்போம், எங்க கலாச்சாரத்தை அழிக்க நினைப்பவங்களை அடிச்சு விரட்டுற அளவுக்கு மோசமாகும் இருப்போம் என்கின்றனர் கொங்கு மண்ணின் மைந்தர்கள்.
வேள்வி ஓயாது
சென்னை மெரினாவை நோக்கி குடும்பம் குடும்பமாக திரள்வதைப் போல கோவை வஉசி மைதானத்தை நோக்கி சாரை சாரையாக மக்கள் பெருவெள்ளம் படையெடுத்து ஆர்ப்பரிக்கிறது. வெயிலென்ன, குளிரென்ன, மழையென்ன வாடிவாசல்கள் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப் பாயும் வரை எங்களின் இந்த புரட்சி வேள்வி ஓய்ந்துவிடப் போவதில்லை என்கின்றனர் கோவை மக்கள். வெல்லட்டும் புரட்சி