தானம் செய்த ரத்தம் விற்பனை... சேலம் கமல் நற்பணி மன்ற பொறுப்பாளர் மீது போலீசில் புகார்!
தான முகாம் மூலம் கிடைத்த ரத்தத்தை விற்பனை செய்ததாக சேலம் கமல் நற்பணிமன்ற பொறுப்பாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் : தான முகாம் மூலம் கிடைத்த ரத்தத்தை விற்பனை செய்ததாக சேலம் கமல் நற்பணிமன்ற பொறுப்பாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட கமல் நற்பணிமன்ற பொறுப்பாளர் பாலச்சந்திரன் மீது முன்னாள் நிர்வாகி சண்முகசுந்தரம் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார்.
நடிகர்களின் பிறந்தநாள், திரைப்பட வெற்றி உள்ளிட்டவற்றை கொண்டாடுவதற்காக மாவட்ட தோறும் இருக்கும் ரசிகர் மன்றத்தினர் மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதே போன்று சேலம் மாவட்ட கமல் நற்பணி மன்றத்தினரும் அண்மையில் ரத்த தான முகாம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

ரத்த தானம் கொடுப்பது நல்ல விஷயம் தான் என்பதால் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து ரத்தத்தை கொடையாக அளித்துவிட்டு சென்றனர். இந்நிலையில் சேலம் கமல் நற்பணி மன்ற பொறுப்பாளர் பாலச்சந்திரன் என்பவர் ரத்ததானத்தில் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை பணத்திற்காக விற்பனை செய்துள்ளதாக சக நிர்வாகியே குற்றம் சாட்டியுள்ளார்.
வெறும் குற்றச்சாட்டோடு நின்று விடாமல் பாலச்சந்திரன் மீது சேலம் மாவட்ட காவல்துறையினரிடம் முன்னாள் நிர்வாகி சண்முக சுந்தரம் புகார் அளித்துள்ளார். கமல் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில்,ரசிகர் மன்ற பொறுப்பிற்காக இந்த புகாரை சண்முக சுந்தரம் தெரிவித்தாரா அல்லது புகாரில் உண்மையிலேயே முகாந்திரம் இருக்கிறதா என்றெல்லாம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications